‘பிரபாகரனை கொச்சைப்படுத்தாதீர்கள்!’ - காசி ஆனந்தன்
ஒரு இனத்தின் விடுதலைக்காகப் போராடும் பிரபாகரனை கொச்சைப்படுத்தாதீர்கள். ஒருவர் இறந்தபிறகு தரும் மரியாதையை, அவர் உயிரோடு இருக்கும்போதே கொடுங்கள், என்றார் கவிஞர் காசி ஆனந்தன்.
திரைப்பட ஒளிப்பதிவாளர் கவியரசு எழுதிய ‘மேலைக் கடலில் ஈழக்காற்று’ என்ற புத்தகத்தின் வெளியீட்டு விழா கவிஞர் காசி ஆனந்தன் தலைமையில் சென்னையில் சனிக்கிழமை மாலை நடந்தது. தலைமை உரையாற்றிய கவிஞர் காசி ஆனந்தன் பேசியதாவது:
ஊடகங்களும், அரசியல்வாதிகளும் இது தேர்தல் காலம் என கூறுகிறார்கள். இல்லை… அது பிழையானது. இது போராட்டக் காலம். தமிழகத்தின் ஒரே தொப்புள் கொடி உறவு ஈழத் தமிழர்களைக் காக்க ஒட்டுமொத்த தமிழகமே எழுச்சியுடன் நிற்கும் காலம்.
உலகில் எந்தப் போராட்டத்துக்கும் இல்லாத சிறப்பு ஈழப் போராட்டத்துக்கு உண்டு. உலகப் புரட்சிகளுக்கெல்லாம் அண்டை நாட்டு வல்லரசுகளின் ஆயுத, அரவணைப்புகள் கிடைத்தன. இன விடுதலை எளிதில் சாத்தியமானது. ஆனால் நமக்கு… நம்மைத் தவிர வேறு யார்?. இன்று உலகெங்கிலும் வாழும் லட்சக்கணக்கான புலம் பெயர் தமிழர்கள், உலகின் கவனத்தை தமிழர்பால் திருப்பியுள்ளனர்.
பிரபாகரன் ஈழம் முழுவதையும் வென்றிருந்தால் கூட, ஐநா சபை சபை பாதுகாப்பு மன்றம் வாய் திறந்திருக்காது. ஆனால் இன்று வாய் திறந்து ஈழப் பிரச்சினையை பேசுகிறது. அந்தச் சாதனையைச் செய்திருப்பவர்கள் புலம் பெயர் தமிழர்களே. செய்ய வைத்திருப்பவர் பிரபாகரன்.
இன்று உலகம் தமிழன் இன விடுதலைப் பற்றி, தமிழ் ஈழம் பற்றி பேசுகிறது… அதுதான் நமது வெற்றி. நான் அடிக்கடி சொல்வதைப் போல, தமிழன் தன் புத்திசாலித்தனத்தால் ஈழம் வெல்லாவிட்டாலும், சிங்களவனின் முட்டாள்தனத்தால் அது கிடைக்கும். பயங்கரவாதி, சகோதரயுத்தம் நடத்தியவர் என்றெல்லாம் இழித்தும் பழித்தும் சிலர் பேசி வருகிறார்கள். பிரபாகரனை அழித்து விட்டுப்பேசலாம் என்கிறது இந்தியா. தாங்கொணாத வேதனையைத் தருகிறது அந்தப் பேச்சு.
பிரபாகரனை பழித்துப் பேசுவோரை வரலாறு மன்னிக்காது… இறந்த பிறகு மாலை மரியாதையுடன் தரப்படும் பட்டங்களால் என்ன பயன்… உயிருடன் இருக்கும் அந்தத் தலைவனை இப்போது பழித்துவிட்டு, அவர் காலத்துக்குப் பின் போற்றிப் பாடும் அதே வழக்கமான தவறை இப்போதும் செய்து விடாதீர்கள். இறந்தபிறகு மரியாதையுடன் புருஷோத்தம மன்னனைப் போல நடத்தப்பட வேண்டும் என்கிறீர்களே… அந்த மரியாதையை அவர் உயிருடன் இருக்கும்போது கொடுங்கள் என்றுதான் கேட்கிறோம்.
ராஜீவ் காந்தியின் கொலையை நாங்கள் நியாயப்படுத்தவில்லை. ஆனால் இந்தியப் படைகள் ஈழத்தில் நடத்திய கோரத் தாண்டவத்தை நாங்கள் எப்படி மறப்பது? 3000 தமிழ் தாய் - சகோதரிகளையும், 6000க்கும் மேற்பட்ட மக்களையும் கொன்ற இந்திய ராணுவத்தின் கொடூரத்தை எப்படி மறக்க முடியும்?
புலிகளை பயங்கரவாதிகள் என்கிறீர்களே… எப்போதாவது, ஒரு புலி அப்பாவி சிங்களவர்களை கொத்துக் கொத்தாகக் கொன்றதாகக் கூற முடியுமா?. எந்தப் புலி வீரனாவது ஒரு சிங்களப் பெண்ணை கெடுத்ததாக, குறைந்தபட்சம் கேவலமாக நடத்தியதாக நீங்கள் கேள்விப்பட்டதுண்டா… அல்லது இலங்கையின் எந்த ஆட்சியாளராலாவது அப்படி ஒரு புகாரைக் கூற முடியுமா? எந்த அடிப்படையில் இவர்கள் பயங்கரவாதிகள்? என்றார் காசி ஆனந்தன்.






0 விமர்சனங்கள்:
Post a Comment