வணங்காமண் கப்பலிலுள்ள பொருள்கள் மக்களைச் சென்றடையவேண்டும்: இந்தியா
“கப்டன் அலி” என அழைக்கப்படும் வணங்காமண் கப்பலிலுள்ள நிவாரணப் பொருள்கள் இலங்கையில் பாதிக்கப்பட்ட இலட்சக்கணக்கான மக்களுக்குச் சென்றடைய நடவடிக்கை எடுக்கவேண்டுமெனத் தமிழக முதலமைச்சர் மு.கருணாநிதி, இந்திய மத்திய அரசாங்கத்திடம் கோரிக்கைவிடுத்துள்ளார்.
இலங்கையில் இடம்பெயர்ந்த மக்களுக்கான நிவாரணப் பொருள்களை ஏற்றிக்கொண்டு இலங்கைக்குள் நுழைந்த வணங்காமண் கப்பல் இலங்கை கடற்படையினரால் திருப்பியனுப்பப்பட்டது. இந்தக் கப்பலிலுள்ள பொருள்கள் பாதிக்கப்பட்ட மக்களைச் சென்றடைவதற்கான அழுத்தத்தை இந்தியா கொடுக்கவேண்டுமெனவும், அந்தக் கப்பலிலுள்ள பொருள்கள் சர்வதேச செஞ்சிலுவைக் சங்கம் போன்ற சர்வதேச அமைப்பின் முன்னிலையில் இறக்கப்பட்டு மக்களுக்கு வழங்கப்பட வேண்டுமெனவும் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
மனிதாபிமான அடிப்படையில் இந்த உதவியை இந்தியா செய்யுமெனத் தான் நம்புவதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதேநேரம், வணங்காமண் கப்பலிலுள்ள பொருள்கள் பாதிக்கப்பட்ட மக்களைச் சென்றடைவதற்கான நடவடிக்கை எடுக்கப்படுமென இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா உறுதிமொழி வழங்கியுள்ளார்.
புலம்பெயர்வாழ் தமிழர்களால் சேகரிக்கப்பட்ட நிவாரணப் பொருள்களை ஏற்றிக்கொண்டு கடந்த ஏப்பிரல் பிரான்சிலிருந்து புறப்பட்ட ‘கப்டன் அலி’ அல்லது வணங்காமண் கப்பல் கடந்த மே மாதம் இலங்கையை வந்தடைந்தது.
வணங்காமண் கப்பல் இலங்;கை கடற்பரப்பிற்குள் நுழைந்தபோது கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டு பாணந்துறை கடற்பகுதிக்கு இழுத்துவரப்பட்டு தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.
அக்கப்பலில் வெடிபொருள்கள் எதுவும் இல்லையென்றபோதிலும், நிவாரணப் பொருள்களை இறக்காமல் நாடு திரும்பிச் செல்லுமாறு கடற்படை அதிகாரிகள் கப்டன் அலி கப்பலுக்கு உத்தரவிட்டனர். இந்த உத்தரவைத் தொடர்ந்து கப்டன் அலி கப்பல் இலங்கையிலிருந்து புறப்பட்டு சென்னை துறைமுகத்துக்கு வெளிப்புறமாக நங்கூரமிட்டுள்ளது.






0 விமர்சனங்கள்:
Post a Comment