தமிழினியை தொடர்ந்து தடுத்து வைத்திருந்து விசாரணைகளை மேற்கொள்ள நீதிமன்றம் அனுமதி
தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவின் பெண்கள் அணித் தலைவி சுப்ரமணியம் சிவகாமி (தமிழினி)யை காவற்துறையினரின் வேண்டுகோளுக்கிணங்க பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர் தொடர்ந்து தடுத்து வைத்திருக்கவும், விசாரணைகளை மேற்கொள்ளவும் கொழும்பு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
காவல் தலைமையகத்திற்கு விஜயம் செய்த நீதிவான் நிசாந்த ஹப்பு ஆராய்ச்சி தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழினியைப் பார்வையிட்டதோடு தடுத்து வைத்து விசாரிப்பதற்கான உத்தரவையும் வழங்கினார்.
தமிழினி மோதல் தவிர்ப்பு வலயத்திலிருந்து வெளியேறி மே மாதம் சரணடைந்ததிலிருந்து காவற்துறையினரின் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
தமிழினி விடுதலைப் புலிகளின் அரசியல் கோட்பாட்டாளரான அன்ரன் பாலசிங்கத்தினால் பயிற்றுவிக்கப்பட்டவர் என காவற்துறையினர் அங்கு விஜயம் செய்த நீதிபதியிடம் தெரிவித்துள்ளனர்.
ஓகஸ்ட் 28 வரை அவரைத் தடுத்து வைத்திருப்பதற்கான அனுமதியை நீதிபதி வழங்கியுள்ளார். விடுதலைப் புலிகளின் மேலும் சில முக்கிய உறுப்பினர்கள் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருவதாகத் தெரிய வருகிறது.
விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்ட மே 18 வரை மோதல் தவிர்ப்பு வலயத்தில் இருந்து பணியாற்றிய ஐந்து வைத்தியர்களையும் பாதுகாப்பு படையினர் தடுத்து வைத்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
0 விமர்சனங்கள்:
Post a Comment