இந்திய அரசின் பணிப்பின் பேரிலேயே ரோ விமானம் ஆய்வு
கிளிநொச்சியை இராணுவம் கைப் பற்றியதைத் தொடர்ந்து இந்திய அரசின் உத்தரவின்படியே இந்தியாவின் உளவு நிறுவனமான ரோ இலங்கை கடற் கரைக்கு மிகத் தாழ்வாகப் பறந்து சென்று ஆய்வில் ஈடுபட்டதாக இந்திய ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
அதன் விபரம் வருமாறு; இந்திய அரசின் உத்தரவுப்படி இந்த ரகசிய வான் வழி ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாம்.
ரோ அமைப்பின் வான்வெளி ஆய்வு மையத்திற்குச் சொந்தமான விமானம் மூலம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
சனிக்கிழமை அதிகாலை 3.00 மணிக்கு இந்த விமானம் சென்னை விமான நிலையத்திலிருந்து கிளம்பிச் சென்றுள்ளது. இந்த ரகசிய ஆய்வை, இலங்கை அரசு விடுத்த வேண்டுகோளின்படி ரோ மேற்கொண்டதா என்பது உறுதிப்படுத்தப்படவில்லை.
நவீன கருவிகளுடன் கூடிய அந்த உளவு விமானம், இலங்கை கடற்கரைக்கு மிக அருகே தாழ்வாக பறந்து சென்று ஆய்வு மேற்கொண்டது. பின்னர் மீண்டும் சென்னை திரும்பாமல் வேறு ஒரு விமான நிலையத்திற்கு அந்த விமானம் போய் விட்டதாக தெரிவிக்கிறது அந்தத் தகவல்.
ஏ.ஆர்.சியிடம் போயிங், கல்ப்ஸ்ட்ரீம் மற்றும் எம்பிரேயர்ஸ் ரக விமானங்கள் உளளன. இந்த விமானங்களில் அதிக உயரத்தில் பறந்தபடி, மிகத் துல்லியமாக படம் பிடிக்கும் அதி நவீன கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த விமானங்கள் 40 ஆயிரம் அடி உயரம் வரைக்கும் பறக்கக் கூடியவை என்பது குறிப்பிடத்தக்கது.
ஏ.ஆர்.சியின் விமானங்களை ஓட்ட தனியாக பைலட்டுகள் உள்ளனர். இந்திய விமானப்படை விமானிகள் கூட இந்த வகை விமானங்களை ஓட்டுவதற்கு அழைக்கப்பட மாட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மிக மிக ரகசியமான பணி என்பதால் இந்த ஏற்பாடு.
நாட்டில் உள்ள அனைத்து விமான நிலையங்கள் மற்றும் விமானப்படை விமானங்களை ஏ.ஆர்.சியின் விமானங்கள் பயன்படுத்திக் கொள்வது வழக்கம். இதற்கென தனியாக விமான நிலையம் எதுவும் கிடையாது.
சென்னைக்கு ஏ.ஆர்.சி. விமானம் வந்தது கூட ரகசியமாகவே வைக்கப்பட்டிருந்தது. எங்கிருந்து வந்தது என்பது கூட விமான நிலைய அதிகாரிகளுக்குத் தெரிவிக்கப்படவில்லையாம். இலங்கையின் கோரிக்கையின்படியே இந்த உளவு வான் வழி ஆய்வை ரோ மேற்கொண்டதாக நம்பப்படுகிறது.
0 விமர்சனங்கள்:
Post a Comment