விடுவிக்கப்படாத பகுதியிலிருந்து வெளியேறும் மக்கள் மீது புலிகள் துப்பாக்கிப் பிரயோகம் : ஐ.நா. பிரதிநிதி ஜோன் ஹோம்ஸ் குற்றச்சாட்டு
விடுதலை புலிகள் தமது கட்டுப்பாட்டுப் பகுதியில் இருந்து வெளியேறும் பொதுமக்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்வதாக குற்றம்சாட்டியுள்ளதுடன் மோதல்களின் போது உயிரிழப்புக்களைத் தவிர்க்குமாறு இராணுவத்தினரையும் கேட்டுக்கொண்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் நிவாரண மற்றும் மனிதாபிமான விடயங்களுக்கான இணைப்பாளர் ஜோன் ஹோம்ஸ் ஊடகவியலாளர்களிடம் தெரிவித்தார்.
இலங்கை வந்துள்ள ஜோன் ஹோம்ஸ் இன்று வெளிவிவகார அமைச்சர் ரோகித போகொல்லாகமவை அமைச்சில் சந்தித்துக் கலந்துரையாடினார்.
வன்னியில் இடம்பெறும் மோதல்கள் காரணமாக இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கான நிவாரண பணிகள் மற்றும் அரசாங்கத்தின் மனிதாபிமான நடவடிக்கைகள் குறித்து ஆராய்வதற்காக வெளிவிவகார அமைச்சின் அழைப்பையேற்று ஐ.நா. பிரதிநிதி ஜோன் ஹோம்ஸ் இலங்கை வந்துள்ளார்.
வெளிவிவாகார அமைச்சுக்கு வருகை தந்த ஜோன் ஹோம்ஸை அமைச்சர் ரோகித்த போகொல்லகம வரவேற்றார்.இதனையடுத்து வெளிவிவகார அமைச்சில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் ஜோன் ஹோம்ஸ் உரையாற்றினார்.
அவர் அங்கு தொடர்ந்து பேசுகையில்,
"வன்னியில் இராணுவ நடவடிக்கைகள் காரணமாக பெருமளவிலான பொதுமக்கள் உயிரிழப்பது மற்றும் காயமடைவது குறித்து நாம் கவனத்திற் கொண்டுள்ளோம். இது தொடர்பாக அறிந்து கொள்ளும் பொருட்டே அரசாங்கம் என்னை அழைத்துள்ளது. மக்களுக்கான மனிதாபிமான நடவடிக்கைகள் குறித்துக் காலையில் அமைச்சரைச் சந்தித்து கலந்துரையாடினேன்" என்றார்.
வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த போகொல்லகம பேசுகையில்,
"வன்னியிலிருந்து இடம்பெயர்ந்து வரும் மக்கள் வவுனியாவில் தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் வவுனியாவில் அமைக்கப்படும் குடியேற்றக் கிராமங்களில் குடியேற்றப்படுவர். அவர்களுக்கான மனிதாபிமான உதவிகள் மற்றும் நிவாரணங்களை அரசு வழங்கி வருகின்றது.இலங்கை வந்துள்ள ஜோன் ஹோம்சை நாளைய தினம் வவுனியாவுக்கு செல்ல அழைத்துள்ளேன்" என்றார்.
0 விமர்சனங்கள்:
Post a Comment