கடந்த காலங்களில் விடுதலைப் புலிகள் தாக்குப் பிடித்ததென்றால் அது கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த போராளிகளினால்தான்
பாராளுமன்ற உறுப்பினர் விநாயகமூர்த்தி முளிதரனுக்கு (கருணா அம்மான்) கடந்த 03.03.2009ம் திகதி கல்முனையில் வரவேற்பளிக்கப்பட்டது. இந்த வரவேற்பு வைபவம் கல்முனை பாண்டிருப்பு எல்லை வீதியில் உள்ள சகோதரத்துவ மைதானத்தில் ஜனாதிபதியின் அம்பாறை மாவட்ட இணைப்பாளர் எஸ். புஷ்பகுமார் (இனிய பாரதி) தலைமையில் நடைபெற்றது. இவ்வைபவத்தில் அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் ஆற்றிய உரை
யுத்தத்தில் நீண்ட காலம் ஈடுபட்டு பல இழப்புக்களைச் சந்தித்து பல சோகங்களின் பின்னர் இன்று ஒரு அமைதியான சூழலுக்குள் நுழைந்து இருக்கிறோம். தமிழர்களது போராட்ட வரலாறு நியாயமானது. இது உலகறிந்த வரலாறு. இடை நடுவில் நடந்த தவறுகள் காரணமாக இந்தப் போராட்டம் திசைமாறிச் செல்கிறது.
இந்தப் போராட்டத்தை அன்று உலக நாடுகள் அங்கீகரித்து வரவேற்றன. விடுதலைப் புலிகளாக வலம் வந்த நாங்கள் பயங்கரவாதிகளாக மாற்றம் அடைந்தோம்.
இந்தியப் படை இலங்கைக்கு வந்த பின்பு ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தத்தை விடுதலைப் புலிகள் ஏற்றுக்கொள்ளவில்லை. இந்தியப் படைக்கு எதிரான போராட்டம் நடைபெற்றது. அன்றைய அரசு புலிகளின் இந்த நிலையை சிறந்த தந்திரோபாயமாக பயன்படுத்தி இந்தியப் படையை வெளியேற்றியது.
அத்தோடு அந்த பகைமை உணர்வை நாம் நிறுத்தியிருக்க வேண்டும். ஆனால் விடுதலைப் புலிகளின் தலைவர் அதனைக் காரணமாக வைத்து இந்திய மண்ணுக்குச் சென்று இந்திய அரசுத் தலைவர் ராஜீவ் காந்தியை கொலைசெய்துவிட்டார். இதன் காரணமாகத்தான் முதன் முதலில் விடுதலைப் புலிகள் இயக்கம் இந்திய அரசினால் பயங்கரவாத அமைப்பு என அறிவிக்கப்பட்டது.
அதன் பின்னர் 26க்கும் மேற்பட்ட உலக நாடுகள் புலிகள் இயக்கத்தை பயங்கரவாத இயக்கமாக பிரகடனப்படுத்தின. அந்த நாட்களில் நாம் பல தியாகங்களைச் செய்து யுத்தங்களுக்கு முகம் கொடுத்துக் கொண்டிருந்தோம்.
கடந்த காலங்களில் விடுதலைப் புலிகள் தாக்குப் பிடித்ததென்றால் அது கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த போராளிகளினால்தான். அவர்கள் தான் தொடர்ந்து யுத்த களத்தில் இருந்தார்கள். அது வன்னியாக இருந்தாலும், குடாநாடாக இருந்தாலும் சரி எங்களின் கால் படாத இடங்களுமில்லை, அவர்களை நாங்களே காப்பாற்றினோம்.
பல ஒப்பந்தங்கள் வந்திருக்கின்றன. பல அரசியல் வாய்ப்புகள் ஏற்படுத்தப்பட்டிருந்தன. பிரச்சினைகளைத் தீர்ப்பதற்குப் பதிலாக அதையெல்லாம் விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் தட்டிக் கழித்து வந்தார்.
இறுதியாக கிடைத்த வாய்ப்பு 2003 ஆம் ஆண்டு வந்த பேச்சுவார்த்தை என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும். விடுதலைப் புலிகள் இயக்கம் உலக அரங்கிலே தங்கள் நிலையை மாற்றிக் கொள்வதற்காக இறுதியாக கிடைத்த ஒரு வாய்ப்பு. அதில் நானும் ஒரு அங்கத்தவனாக கலந்துகொண்டிருந்தேன்.
பிற நாடுகளுக்கும் நாம் சென்றிருந்தோம். பல பேச்சுவார்த்தைகள் நடத்தினோம். ஒரு அரசியல் தீர்வை எடுக்க வேண்டும் என்பதில் நான் கவனமாக இருந்தேன். ஏனென்றால் அன்று யுத்த களத்தில் நின்று கொடுமைகளை அனுபவித்தவன் என்ற வகையில் எனக்குத்தான் அந்த இழப்புக்களின் தாற்பரியம் விளங்கியது. இது பிரபாகரன் என்பவருக்கு விளங்காது. நான் பல தடவைகளில் இதனை அவரிடம் கூறியிருக்கின்றேன்.
சமஷ்டி முறையிலான ஆட்சி முறையை ஏற்றுக்கொள்வதற்காக அன்று அன்ரன் பாலசிங்கம் நோர்வேயிலிருந்து கைச்சாத்திட்டார். அதனை நான் மிகவும் வரவேற்று ஏற்கும்படி கூறினேன். அந்த ஒப்பந்த ஆவணத்தை எடுத்து வந்து பிரபாகரனிடம் கொடுத்த போது அவர் அதனை வீசி எறிந்துவிட்டார்.
‘நீங்கள் துரோகம் செய்துவிட்டீர்கள், போராட்டத்தை விற்றுவிட்டீர்கள், காட்டிக் கொடுத்துவிட்டீர்கள்’ என்றெல்லாம் என்னிடம் மிகவும் ஆவேசமாகப் பேசினார்.
நான் அவருக்கு சற்று நிதானமாக விளக்கினேன்.
‘நாங்கள் ஒரு காலமும் தனிநாடு பெறமாட்டோம். ஆகவே எங்கள் தந்திரோபாயங்களை மாற்றியமைத்து நாங்கள் இந்த அரசியல் தீர்வை ஏற்று எமது மக்களை அபிவிருத்திப் பணிகளில் ஈடுபடுத்துவது சிறந்தது’ என பல தடவைகளில் கூறினேன்.
யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்து எமது மக்களைக் காப்பாற்ற வேண்டும். எமது குழந்தைகளைப் பாதுகாக்க வேண்டும் எனக் கூறினேன். நாம் கெளரவம் பார்க்காமல் ஏற்றுக் கொள்வோம் என மீண்டும் மீண்டும் கூறினேன். அதனை அவர் ஏற்க மறுத்துவிட்டார்.
உடனடியாக நான் வெளிப்படையாகக் கூறினேன். எமக்கு யுத்தம் செய்ய விருப்பம் இல்லையென்று. அதன் பலனாகத்தான் கிட்டத்தட்ட 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இளைஞர்களை வீடுகளுக்கு அனுப்பிவிட்டு இன்று ஒரு அரசியல் மாற்றத்தை நாம் ஏற்படுத்தியிருக்கிறோம். பல பிரச்சினைகள் விடுதலைப் புலிகளினால் ஏற்படுத்தப்பட்டன. அதனால் 8 ஆயிரத்து 500 இளைஞர்கள் மடிந்திருக்கின்றார்கள்.
இந்த 8500 பேரில் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் 6 ஆயிரம் பேர் வட மாகாணத்தில் மடிந்திருக்கின்றார்கள். இதனை அவர்கள் மறந்துவிட்டார்கள். ஏனென்றால் அவர்களை காப்பாற்றுவதற்காகத் தான் இவர்கள் அங்கு மடிந்தார்கள்.
தொடர்ந்து எங்கள் இளைஞர்களை யுத்தத்தில் ஈடுபடுத்த முடியாது. அவர்களைக் காப்பற்ற வேண்டும். என்கின்ற நோக்கத்தில் தான் இந்த யுத்தம் வேண்டாம் என்று விலகி வந்தோம்.
எங்களது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எங்களை வரவேற்றார். நீங்கள் வந்து எங்களுடன் சேர்ந்து அரசியல் வேலைகளில் ஈடுபடுங்கள். நாங்கள் இந்த நிருவாகத்தை ஒப்படைப்போம். கிழக்கு மாகாண நிருவாகத்தை ஒப்படைப்போம், அதுவும் ஒரு தேர்தல் ஊடாக ஒப்படைப்போம் எனக் கூறியிருந்தார்கள்.
நான்கு வருடங்களின் பிற்பாடு அந்த வாக்குறுதி இன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. இன்று தமிழ் மக்களிடம் எங்களது மாகாண சபை கையளிக்கப்பட்டிருக்கின்றது. அது பாராட்டக் கூடிய விடயம். குறைபாடுகளை நாம் மாற்றியமைத்துக் கொள்ள வேண்டும்.
இந்த வெற்றிக்குக் காரணமாக இருந்தவர்கள் அம்பாறை மாவட்ட தமிழ் மக்கள். இல்லாவிடில் கிழக்கு மாகாண சபையை நாம் இழந்திருப்போம்.
நாட்டின் ஜனாதிபதி மிகவும் பலம் வாய்ந்தவராக இருக்கின்றார். அவருடன் நாம் சேர்ந்து செயற்பட்டால் அரசியல் அந்தஸ்துடைய கெளரவமான மனிதர்களாக நாம் நடமாடுவோம்.
நான் பாராளுமன்றத்துக்குச் சென்றதன் பிற்பாடு பல வேலைத் திட்டங்களை செய்திருக்கின்றேன். கல்முனை பிரதேச செயலகத்தை தரமுயர்த்துவதற்கான வேலைத் திட்டம் பூர்த்தியான நிலையில் இருக்கின்றது. மிக விரைவில் அதனை செய்து முடிப்போம்.
தமிழ்க் கூட்டமைப்பில் பாராளுமன்றம் சென்றவர்கள் எதிர்க் கட்சியில் உள்ளார்கள் அவர்களால் எதையும் செய்ய முடியாது.
இன்று எமது மக்கள் அறிவுள்ளவர்களாக இருக்கிறார்கள், சிறந்த கல்விமான்களாக இருக்கிறார்கள்.
இன்று நாங்கள் மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கின்றோம். நாங்கள் ஒருபோதும் வடக்கு மக்களுக்கு எதிரானவர்கள் அல்ல. ஏனென்றால் அந்த மக்களின் துன்ப, துயரங்கள் எனக்கு நன்கு தெரியும்.
இன்று வன்னியில் உயிரிழப்பு நடக்கின்றது. அன்று நான் சொன்ன கருத்தை பிரபாகரன் ஏற்றிருப்பாராக இருந்தால் இன்று பாரிய அழிவைத் தடுத்திருக்கலாம்.
வன்னியிலே வாழ்கின்ற மக்கள் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளார்கள்.
அவர்களை மனிதக் கேடயங்களாக பயன்படுத்திக் கொண்டு விடுதலைப் புலிகள் சண்டை பிடித்துக் கொண்டிருக்கின்றனர்.
ஒரு குடையின் கீழ் நாங்கள் இயங்க வேண்டும் என்பதை உங்களிடம் அன்பாக கேட்டுக்கொள்கின்றேன்.
ஏனென்றால் இன்று எமக்குள்ள பிரச்சினை அபிவிருத்தி, அமைதியான வாழ்க்கை அதன் பிற்பாடுதான் அதிகாரங்களைப் பற்றிக் கதைக்க முடியும்.
தேவையற்ற விவாதங்களும், செய்யப்பட முடியாத இலக்குகள் பற்றிக் கதைப்பதும், விதண்டாவாத போக்குகளால் அரசியல் பேசுவதும் எமது அழிவுகளுக்குத் தான் வழிவகுக்கும்.
மிக விரைவில் எமது மக்களை கெளரவமிக்க மக்களாக நாங்கள் மாற்றுவோம். அதை நீங்கள் நம்ப வேண்டும். அதற்காக நீங்கள் தொடர்ந்தும் ஒத்துழைப்புக்களை வழங்க வேண்டுமெனக் கேட்டுக்கொள்கின்றேன்.
இவ்வாறு முரளிதரன் எம் .பி. தனது உரையில் தெரிவித்தார்.






0 விமர்சனங்கள்:
Post a Comment