புலம் பெயர் தமிழர்கள் - இலங்கை அரசு சந்திப்பு 27-29 மார்ச் 2009
சென்ற மார்ச் மாதம் 27-29 ம் திகதிகளில் கொழும்பில் நடைபெற்ற அரசுக்கும் புலம்பெயர் தமிழருக்குமான கருத்தரங்கு பற்றி அறிக்கையிடுவது அவசியம் என்ற உணர்வில் இக்கட்டுரையை எழுதத் துணிந்துள்ளேன். தமிழ் வெறியும் சிங்கள் வெறுப்பும் கொண்டவர்களை திருப்திப்படுத்த வேண்டிய தேவை எமக்கில்லை. ஆனால் அங்கு அல்லலுறும் தமிழ்மக்கள் பற்றி உண்மையாகவே அக்கறையுடையவர்களுக்கு நடந்ததை அறிவிப்பது எமது கடமை.
விடுதலைப்புலிகளால் முன்னெடுக்கப்படும் தமிழ் தேசிய விடுதலைப் போராட்டம் வரலாற்றில் மிக மோசமான தோல்விகளை இன்று எதிர்கொண்டுள்ளது. ஈழம் வெறும் கனவாகிப் போக தோல்வி மனப்பான்மை பெரும்பாலான புலம்பெயர் தமிழர்களை ஆட்கொள்ளுகிறது. இலங்கை அரசு இனித் தமிழர்களை அடிமைகள் போல அடக்கி ஆழ்வார்கள் என அவர்கள் அச்சப்படுகிறார்கள். சகல வளங்களையும் திரட்டி சிங்கள அரசை சீர்குலைக்கவும் சில சக்திகள் முனைகின்றன. இலங்கையிலுள்ள தமிழர்களில் 53 வீதமானவர்கள் சிங்களப் பகுதிகளில்தான் வாழ்கிறார்கள் என்ற உண்மையையும் வசதியாக மறந்து இலங்கை பொருளாதாரத்தை வெளிநாட்டு சக்திகளின் உதவியோடு வீழ்த்த முனைகிறார்கள். தலைவர்களோ அதிகாரங்கள் பற்றி விவாதித்துக்கொண்டிருக்க மக்களோ யுத்தமில்லாத நாளை எதிர்பார்த்து ஏங்கிக்கொண்டிருக்கிறார்கள்.
இத்தகைய சூழலில் அரசிலுள்ள சில முற்போக்கான சக்திகள் எந்த வெளிச் சக்திகளினதும் ஆதிக்கத்துக்கும் உட்படாது எமது பிரச்சனைகளை சகோதர உணர்வோடு தீர்த்தக்கொள்ள முடியாதா என சிந்திக்க தலைப்பட்டனர். கசப்பான வரலாற்றை மறந்து புதிய சமத்துவமான சமரசமான இலங்கையை கட்டியெழுப்ப முடியுமா என புலம் பெயர்ந்த தமிழர்களும் சிந்திக்கத் தலைப்பட்டனர். வெளிநாட்டு சக்திகளின் அழுத்தங்களால் அரசை அடிபணிய வைக்கலாம் என்ற அசட்டு நம்பிக்கையில் பல எடுப்புக்களில் முனைந்து நிற்கின்ற தமிழர்களை அந்த முற்போக்கு சக்திகள் நம்பத்தயாரில்லை. மாறாக வெளிநாட்டுச் சக்திகள் தங்கள் சொந்த நலன்களுக்காகவே இலங்கை விவகாரங்களில் தலையிடுகின்றன என்பதை புரிந்து கொண்டு நாட்டில்; உண்மையாகவே அக்கறை கொண்டவர்கள் அந்த நாட்டு மக்கள் மட்டுமே என்பதை ஏற்றுக்கொண்ட புலம்பெயர்ந்த தமிழர்களுடன் கருத்துப் பரிமாற விருப்பம் கொண்டார்கள். இதை மெல்பேர்ணிலுள்ள(அவுஸ்திரேலியா) நடேசன் ஒருங்கிணைத்தார். இரு எதிரிகள் போலல்லாது ஒருவரில் ஒருவர் நம்பிக்கையோடு இணைந்து ஒரு விடிவு காணலாம் என்று நம்பியவர்கள் மட்டுமே அழைக்கப்பட்டார்கள். அரசில் கூட இதற்கு மாறான போக்குடையவர்கள் அழைக்கப்படவில்லை. தமிழர்களில் இதே சிந்தனைப்போக்குடைய பலர் எம் மத்தியில் இருக்கலாம். ஆனால் ஒருங்கிணைப்பாளருக்கு அறிமுகமில்லாத படியால் அவர்கள் தவறுதலாக விடப்பட்டிருக்கலாம்.
அரசிலுள்ள இந்த முற்போக்கு சக்திகள் யுத்தத்தில் தமக்கு உதவ எம்மை அழைக்கவில்லை. யுத்தம் பற்றிய எந்த விவாதத்திலும் ஈடுபடவுமில்லை. ஆனால் யுத்த்தினால் பாதிக்கப்பட்டுக்கொண்டிருக்கும் மக்கள் பற்றி நிறைய விவாதங்கள் நடந்தன. பாதிக்கப்ட்ட மக்கள் அரசால் நடாத்தப்படும் முறை ஏற்புடையல்ல என மீண்டும் மீண்டும் வலியுறுத்தப்பட்டது. அகதிகள் பராமரிப்பு இராணுவத்திடமிருந்து சிவில் நிர்வாகத்துக்கு உடனடியாக மாற்றப்படும் என உறுதியளிக்கப்பட்டது. இப்போது அது நிறைவேற்றப்பட்டள்ளது. இவை பற்றி மீண்டும எழுதுகின்றேன்.
பழையனவற்றை மறந்து பரஸ்பர நம்பிக்கையின் அடிப்படையில் பேச அரசு அழைத்தது. எங்கள் மக்களின் அவலங்களை வெளியுலகுக்கு சொல்லி எதுவுமே ஆகாத தருணத்தில் அதை நேரடியாக எங்களுக்குச் சொல்லுங்கள் என்று அரசு கேட்கும்போது ‘உன்னை நம்பமாட்டோம். ஊரானைத்தான் நம்புவோம் உனக்குச் சொல்லவே மாட்டோம்.’ என்று உதைத்துத் தள்ள வரலாறு இடமளிக்கவில்லை. 20 வருடமாக ஊரானை நம்பிக்கெட்டது போதும். இனியாவது சிங்களவனை நம்புவோம். நம்பி இழப்பதற்கு எங்களிடம் எதுவுமில்லை. இந்த இணக்கப்பாடு வெற்றிபெற்றால் வரலாற்றையே மாற்றிவிடலாம் என்ற சிறு நம்பிக்கையோடு வௌ;வேறு நாடுகளிலிருந்து 21 பேர் கொழும்பு சென்றோம். விமானப் பயணச் சீட்டைத் தவிர மற்ற வசதிகள் அரசினால் ஒழுங்செய்யப்பட்டது. பயணச்சீட்டை ஒவ்வொருவரும் சொந்தச் செலவிலேயெ வாங்கினார்கள்.
27 மாலை அறிமுக ஒன்றுகூடலைத் தொடர்ந்து 28 முழு நாளும் ஐந்து அமர்வுகள் இடம் பெற்றன. வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் கலாநிதி பாலித கோகனவின் வரவேற்புரையைத் தொடர்ந்து ‘பிளவுகளின் பின்னர் இலங்கையும் முன்னோக்கிய நகர்வும்’ என்ற கருதுகோளில் வெளியுறவு அமைச்சர் றோகித போகொல்லகம தனது கட்டுரையைச் சமர்ப்பித்தார். தொடர்ந்து கட்டுரை சமர்ப்பித்த நோயல் நடேசன் புலம்பெயர்ந்த தமிழரின் எதிர்பார்புகளை உடனடித் தேவை, இடைக்கால தேவை, நீண்ட கால தேவை என்ற அடிப்படையில் தொகுத்து வழங்கினார்.
முதல் அமர்வு – அதிகாரப் பரவலாக்;கலின் அரசியல் நடவடிக்கைகள்
தலைவர்: லலித் வீரதுங்க – ஜனாதிபதியின் செயலாளர்
போசாளர்: போராசிரியர் திஸ்ஸ விதாரண – விஞ்ஞான தொழில்நுட்ப அமைச்சர் - சர்வகட்சி மாநாட்டு தலைவர்.
தி;ஸ்ஸ தனதுரையில் புதிய அரசியலமைப்பின் பெரும்பகுதி சர்வகட்சிகளாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டதாகவும் எஞ்சியுள்ள சில சிறு விடயங்களில் விரைவில் இணக்கம் காணப்பட்டுவிடுமெனவும் தெரிவித்தார். இந்த நகல் பின்னர் சர்வகட்சி கூட்டங்களில் பங்குபற்றாத யுஎன்பி ரிஎன்ஏ கடசிகளின் அங்கீகாரத்துக்காக சமர்ப்பிக்கப்படும். இவ்விரு கட்சிகளும் அதிகாரப் பகிர்வு யோசனையை நிச்சயமாக எதிர்க்கமாட்டார்கள் என நம்பலாம். எதிர்வரும் தேர்தலின்போது அதிகாரப் பரவலாக்கத்திற்கு எதிரான ஜேவிபி சிகல உறுமய போன்ற கட்சிகள் பலமிழந்துவிடும். இந்த நேரத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் புதிய அரசியல் யாப்பு நிறைவேற்றப்படும்.
புதிய யாப்பில் ஜனாதிபதி முறை ஒழிக்கப்பட்டு வெஸ்ற்மினிஸ்ரர் பாராளமன்ற முறை மீண்டும் நடைமுறைக்கு வரும். செனட் சபை போன்று இரண்டாவது சபை அமைக்கப்பட்டு சிறுபான்மையினரின் உரிமைகள் பாதுகாக்கப்படும். மத்தியஅரசின் அதிகாரங்கள் மாகாணசபை கிராமசபை என்ற அலகுகளிற்கு பரவலாக்கப்படும். மாகாணசபை காணி, பொலீஸ் உட்பட்ட பல் அதிகாரங்களை கொண்டிருக்கும். கிராமசபைகள் நேரடியாக மத்தியஅரசிடமிருந்து நிதி பெற்று தனது அபிவிருத்தி திட்டங்களை நிர்வகிக்கும் அதிகாரத்ததை பெற்றிருக்கும் இந்த அமைப்பின் மூலம் அதிகாரம் நேரடியாக மக்களிற்கு பரவலாக்கப்படுகின்றது.
புதிய யாப்பு முற்போக்கான பல அம்சங்களைக் கொண்டிருந்தபோதும் இவைற்றை நிறைவேற்ற எடுக்கும் காலதாமதம் பற்றி பிரதிநிதிகள் விசனம் தெரிவித்தனர். மேலும் அந்த யாப்பு நிசைவேறும் காலம்வரை இன்று சட்டமாகவுள்ள 13ம் திருத்தத்தை முற்றாக அமுல்படுத்தி மாகாணசபைகளுக்கு உடனடியாக அதிகாரம் வழங்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது. அரசு அதை கவனத்தில் கொண்டு ஆவன செய்வதாக உறுதியளித்தது.
இரண்டாவது அமர்வு – சிவில் நிர்வாகமும் எதிர்கொள்ளும் சவால்களும்
தலைவர்: கலாநிதி ராமானுஜம் – செயலாளர், நகர அபிவிருத்தி புனித பிரதேச அமைச்சு
போசாளர்: லலித் வீரதுங்க – ஜனாதிபதியின் செயலாளர்
யுத்த சூழ்நிலையில் கிழக்கிலே அபிவிருத்தி பணிகளில் சிவில் நிர்வாகம் எதிர்கொள்ளும் சவால்களையும் அதை எவ்வாறு சிறப்பான முறையில் நிறைவேற்றி வருவதாகவும் எடுத்துரைக்கப்பட்டது.
மூன்றாவது அமர்வு – வடக்கின் வசந்தம்
தலைவர்: அஜித் நிவாட் கப்ரால் – தலைவர் மத்திய வங்கி
போசாளர்: சந்திரா பெனார்ண்டோ – ஆலோசகர்- கிழக்கின் உதயம்
கிழக்கின் அனுபவங்களுடாக வடக்கை எவ்வாறு மீளக் கட்டியமைக்கக் கூடிய கட்டுமானங்களை உருவாக்க முடியும் எனப் பேசப்பட்டது. நீண்ட ஏழு வருடத்திட்டத்தின் கீழ் கிழக்கில் பாரிய அபிவிருத்திபணிகள் துவங்கப்பட்டுள்ளது. நெடும்சாலைகள், பாலங்கள், விவசாய கடத்தொழில் அபிவிருத்தித்திட்டங்கள் பெருமளவில் நிறைவேற்றுபட்டுவிட்டன. கிழக்கின் நெல் உற்பத்தி சென்ற வருடம் இருமடங்காக உயர்ந்துவிட்டது. தற்போது கிழக்கு இலங்கையில் நெற்தேவையின் பெரும்பகுதியினை பூர்த்தி செய்கிறது, அங்கு 3வீதமான அகதிகளைத் தவிர மற்றெல்லோரும் குடியமர்த்தப்பட்டுள்ளனர். வீடு அல்லாதவர்களுக்கு பல புதிய நவின வசதிகள் கொண்ட வீடமைப்புத்திட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த அபிவிருத்திப்பண்கள் பற்றிய புள்ளிவிபரங்களும் புகைப்படங்களும் சமர்ப்பிக்கப்பட்டன.
கிழக்கின் உதயம் பற்றிய தகவல்கள் தம்மை ஆச்சரிப்படுத்துவதாக பிரதிநிதிகள் தெரிவித்தனர். ஒரு வளர்சியடைந்த நாட்டில் மட்டுமே இயலக்கூடிய திட்டங்களை இத்தனை துரித கதியில் நிறைவேற்றிக்கொண்டு அது பற்றி புலம் பெயர்ந்த தமிழர்கள் மத்தியில் எந்தப் பிரசாரமும் செய்யாமல் இருப்பது அரசின் மெத்தனமே எனக் குற்றம்சாட்டப்பட்டது. வெளிநாட்டிலுள்ள தூதரகங்கள் தமிழர்களுடன் தொடர்பு கொள்ளாது இருப்பதாலேயே அரசின் நல்ல முயற்சிகள் கூட தமிழர்களுக்கு தெரியாமல் போய்விடுகிறது. அரசு தமிழர்களை ஒழித்தக் கட்டுவதிலேயே கண்ணும் கருத்தாக இருப்பதாக தமிழர் நம்பும் நிலையை மாற்ற இப்படியான திட்டங்கள் பற்றி புலம்பெயர்ந்த தமிழர்களுக்கு தொடர்ந்து அறிவித்துகொண்டிருக்க வெண்டுமென ஆலோசனை கூறப்பட்டது.
மேலும் யத்த பேரழிவு புதிய தொழில் நுட்பங்களை பயன்படுத்தி நாட்டை அபிவிருத்தி செய்ய கிடைத்த வாய்பாகப் எணணி திட்டங்கள் நவீனமாக இருக்க வெண்டுமென ஆலோசனை கூறப்பட்டது.
நாலாவது அமர்வு – அரசியல் தீர்வும் மீளமைப்பும்
தலைவர்: லலித் வீரதுங்க – ஜனாதிபதியின் செயலாளர்
போசாளர்: டியூ குணசேகரா – அரசியல் சட்ட தேசிய நல்லிணக்க அமைச்சர்
அரசியலமைப்பில் தமிழும் உத்தியோக மொழியாக இணைக்கப்பட்டு பல வருடங்களாயும் நடைமுறையில் தற்போதுதான் அது தீவிரமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. 2007ம் ஆண்டு முதல் சகல அரச அலுவலகர்களும் நியமிக்கப்பட்ட மூன்று வருடத்தில் தமிழர்கள் சிங்களத்திலும் சிங்களவர்கள் தமிழிலும் தேர்வுபெற்றிருக்க வேண்டும். அல்லாவிடில் நிரந்தர நியமனமும் ஊதிய உயர்வும் வழங்ப்படமாட்டாது. இதனால் இப்போது பெருமளவு சிங்களவர்கள் தமிழ் படிக்கின்றார்கள். பொலிஸ் திணைக்களம் இதற்கு முன்மாதிரியாகவுள்ளது. அஸ்கிரிய மல்வத்த பீடாதிபதிகள் உட்பட பௌத்த பிக்குக்களுக்கும் தமிழ் போதிக்கப்படுகிறது. இப்போது வடக்கு கிழக்கிலும் தெற்கிலுள்ள தமிழ் பிரதேசங்களிலும் தமிழ் தமிழ உத்தியோக மொழியாக நடைமுறையில் உள்ளது. இன்னும் 18 மாதங்களில் இலங்கையின் எப்பகுதியிலும் உள்ள அரச அலுவலகங்களில் தமிழில் தொடர்பு கொள்ளக்கூடியதாவிருக்குமென உறுதியளிக்கப்பட்டது. மேலும் பாடசாலைகளில் மும்மொழிக் கொள்கை அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இதன் மூலம் எதிர்காலத்தில் சகல பிரசைகளும் சிங்களம், தமிழ் ஆங்கிலத்தில் அறிவுள்ளவர்களாக இருப்பது உறுதிப்படத்தப்படும்
தேசிய நல்லிணக்க அமைச்சின் பணி பிரதிநிதிகளால் வரவேற்றகப்பட்டது. மேலும் அமைச்சர் நேரடியாகவே சென்று தமிழ் அமுல் படுத்தப்படுவதை உறுதி செய்வது சிலாகிக்கப்பட்டது.
கலந்துரையாடல்– எதிர்காலத்துக்காக கைகோர்ப்போம்
ரோகித போல்லேகம-வெளியுறவு அமைச்சர்,
பேராசிரியலர் திஸ்ஸ விதாரண- விஞ்ஞான தொழில்நுட்ப அமைச்சர்
டியூ குணசேகரா - அரசியல் சட்ட தேசிய ஐக்கிய அமைச்சர்
லலித் வீரதுங்க - ஜனாதிபதியின் செயலாளர்
சுகத ஹம்லத் - செயலாளர் நீதி அமைச்சு
பாலித ஹோகன – செயலாளர் வெளியுறவு அமைச்சு
ராமானுஜம் - செயலாளர் நகர அபிவிருத்தி புனித பிரதேச அபிவிருத்தி அமைச்சு
திருமதி ஜெகராசசிங்கம் - செயலாளர் சமூக சேவைகள் அமைச்சு
சந்திரா பெனார்ண்டோ – ஆலோசகர் கிழக்கின் உதயம்
பிரதிநிதிகளின் பல்வேறுபட்ட கேள்விகளுக்கும் அரச குழுவினர் பதிலளித்தனர். யுத்தபிரதேசத்தில் அகப்பட்ட மக்களை மீட்டெடுத்தல், அகதிகள் கைதிகள் போல அடைத்து வைத்திருத்தல், சரணடைந்த போராளிகளுக்கு மறுவாழிவழித்தல் போன்ற விடயங்களில் புலம்பெயர்ந்த மக்கள் கவலை கொண்டள்ளதாக பிரதிநிதிகள் தெரிவித்தனர். மேலும் வடக்கு கிழக்கிற்கு வெளியே வாழும் தமிழ மக்களுக்கு விடுதலைப்புலிகளின் பலம் கலவரங்கள் உருவாகாமல் பாதுகாப்பளித்தது. அந்த பலம் இல்லாது போகுமிடத்தில் அச்சவுணர்வு ஏற்படுதல் தவிர்க்கவியலாதது. அரசு சிங்கள காடையர்களிடமிருந்து தமிழரை பாதுகாக்கும் பொறுப்பை எடுப்பதுடன் இனி ஒரு கலவரம் ஏற்படாது என்பதை உறுதிப்படுத்தவேண்டும் எனக் கேட்கப்பட்டது.
அகதிமுகாம்களின் நிர்வாகம் இராணுவத்திடமிருந்து சிவில் நிர்வாக்கிற்கு உடனடியாக மாற்றப்படும் என உறுதியளிக்கப்பட்டது. அந்த மக்கள் விரைவில் இவ்வருடத்திலேயே தங்கள் இருப்பிடங்களில் குடியமர்த்தப்படுவார்களென்றும் உறுதியளிக்கப்பட்டது. சரணடைந்த புலிகளிற்கு மூன்று சரணாலயங்களில் மறுவாழ்வு அளிக்கப்படுகிறது. அதிலிருந்து பயிற்சி பெற்று ஏற்கனவே சிலர் மத்தியகிழக்கில் வேலை செய்ய அனுப்பப்ட்டள்ளனர். சரணடைந்த அனைத்துப் போராளிகளுக்கும அவர்களது பழைய வரலாறு கேட்கப்படாது மறுவாழ்வு அளிக்கப்படுமென உறுதியளிக்கப்பட்டது. பிரதிநிதிகள் அகதிமுகாம்களையும் மறுவாழ்வு நிலையங்களையும் பார்வையிட அழைக்கப்பட்டனர்.
மேலும் கிழக்கில் இடம்பெற்றுவரும் பாரிய அபிவிருத்தி நடவடிக்கைகள் மத்திய அரசாலேயே செயல்லபடுத்தப்படவதாக தெரிகிறது. இதில் மாகாணசபையின் பங்கு தவிர்க்கபட்டிருப்பது பற்றி குற்றம் சாட்டப்பட்டது. கிழக்கின் அரசியல் நிலைப்பாடு திருப்தியளிக்கவில்லை எனவும் இதே முன்னுதாரணத்தை வடக்கில் தொடரவேண்டாம் எனவும் பிரதிநிதிகளால் வலியுறுத்தப்பட்டது. உண்மையான ஜனநாயக சூழல் உருவாகுமட்டும் வடமாகாணசபை தேர்தலை நடாத்தக்கூடாது எனக் கேட்கப்பட்டது. அதுவரை இடைகால நிர்வாக குழுவே அபிவிருத்தி வேலைகளைக் கையாள வேண்டும்.
இராப்போசன விருந்து
சனி இரவு வெளிவிவகார அமைச்சால் ஒழுங்குசெய்யப்பட்ட இராப்போசன விருந்தில் அமைச்சர்களும் தமிழ் அரசியல்வாதிகளும் வெளிநாட்டு இராஜதந்திரிகளும் அழைக்கப்பட்டனர். இவ்விருந்தின்போது புலம்பெயர்ந்த தமிழர்கள் இலங்கை தமிழ் அரசியல்வாதிகளான டக்ளஸ் தேவானந்த, ஆனந்தசங்கரி, முரளீதரன, சித்தார்த்தன். ரிஎன்ஏ எம்பியான சிறீகாந்தா போன்றவர்களுடனும் நோர்வே அமெரிக்க இந்திய இராஜதந்திரிளுடனும் கருத்துப் பரிமாறக்கூடியதாகவிருந்தது. இச்சந்திப்பின்போது அகதிமுகாம்களுக்கு முதல்முதலாக விஜயம் செய்த அமெரிக்க இராஜதந்திரி அங்கு மக்கள் பராமரிக்கும் விதம் பற்றி திருப்தி தெரிவித்தார். தமிழ் அரசியல்வாதிகள் இணைந்து செயல்பட விருப்பம் தெரிவித்து இணைப்பிற்கு புலம்பெயர்ந்த தமிழர்கள் உதவவேண்டுமெனவும் கேட்டுக்கொண்டனர். இது சம்பந்தமாக நீண்ட கலந்துரையாடல்கள் விருந்தின் பின் இரவு இரண்டு மணிவரை நடைபெற்றது.
28-03-09 இறுதி அமர்வு – பிளவின் பின் அபிவிருத்தியும் சமூக இணக்கப்பாடும்
தலைவர்: சுகத ஹம்லத் –செயலாளர்- நீதியமைச்சு
போசாளர்: டியூ குணசேகரா – அரசியல் சட்ட தேசிய நல்லிணக்க அமைச்சர்
அரசியல் அமைபில் சிறுபான்மையரின் நலன் பேணும் விடங்கள் பற்றியும் சரணடைந்தவர்கள் மறுவாழ்விற்கு சட்ட ரீதியான பாதகாப்ப பற்றியும் விரிவாக விளக்கமளிக்கப்பட்டது. இவ்விடயத்தில் பயங்கரவாதச் தடுப்பச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு எந்த வித வழக்கு தாக்கலும் இல்லாமல் பல வருடங்கள் விளக்கமறியலில் உள்ள ஆயிரக்கணக்கான தமிழர்கள் பற்றி கேள்வி எழுப்பபட்டது. மிகவிரைவில் சட்ட ரீதியாக குற்றமற்ற அனைவரையும் விடுதலை செய்ய நடவடிகடிக்கை எடுக்கப்படும் உறுதியளிக்கப்பட்டது.
இராணுவத்தினரக்கு தமிழ் போதிப்பதோடல்லாமல் அரசியலும் போதிக்கப்படுகிறது. இந்த யுத்தம் தமிழர்களுக்கு எதிரானதல்ல தமிழர்களை விடுவிப்பதற்கே என்ற சிந்தனை அவர்களுக்கு ஊட்டப்படுகிறது.
28-03-09 மாலை பசில் ராஜபக்சவுடன் ஜனாதிபதி அலுவலகத்தில் சந்திப்பு
மூன்றரை மணித்தியாலங்கள் நடைபெற்ற சந்திப்பில் பிரதிநிதிகளால் பல கேள்விகள் எழுப்பப்பட்டன. ஜனாதிபதியின் வஷேச ஆலோசகரான பசில் தனது அதிகாரிகளுடனும் ஆவணங்களுடனும் வந்து சகல கேள்விகளுக்கும் ஆதாரங்களுடன் நிதானமாகப் பதிலளித்தார்.இடம்பெயர்ந்த தமிழ் பிரதேசங்களில் அரசு சிங்கள குடியேற்றம் செய்வதாக சில சிங்கள பத்திரிகையாளர்களே குற்றம் சுமத்துவது பற்றி கேட்கப்பட்டது. அதில் எந்த ஆதாரமுமில்லை என்றும் முதலில் அண்மையில் இடம் பெயர்ந்த தமிழர்களே குடியமர்த்தப்படவார்களென்றும் அதன் பின்னரே அங்கிருந்து முன்னரே இடமபெயர்ந்த சிங்களவர்களும் முஸ்லீம்களும் குடியமர்த்தப் படுவார்கள் என்று உறுதியளித்தார்.
யுத்த பிரதேசத்திலிருந்து தப்பி வந்த தமிழர்கள் இம்சிக்கப்டுவதாக சர்வதேச சமூகம் குற்றச்சாட்டுவது பற்றி கேட்கப்பட்டது. அகதிகள் மூன்று கட்டங்களை பராமரிக்கப்படவதாகவும் முதலில் இராணுவத்தினரால் பொறுப்பேற்கப்பட்டு விபரங்கள் படத்தோடு பதிவு செய்யப்படுகிறது. (பதிவு பத்தகமும் உணவுப் பொதியும் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது). புpன்னர் மருத்தவ பரிசோதனைக்குட்படுத்தப்பட்டு நோயாளிகள் மருத்தவமனைக்கு கொண்டு செல்லப்பட மற்றையோர் தற்காலிக இருப்பிடங்களில் ஆகக் குடியது மூன்று வாரங்களுக்கு வைக்கப்ட்டு பராமரிக்கப்டுகிறார்கள். மூன்றாவத கட்டமாக நிரந்தர அகதிமுகாமிற்கு அனுப்பப்ட்டு தேவாயான உணவு பொருட்கள் வழங்கப்படகிறது. நிரந்தர அகதிமுகாம்கள் விரைவில் இராணுவத்திடமிருந்து சிவில் நிர்வாக்த்திடம் கையளிக்கப்படம் என உறுதியளித்தார். இந்த அகதிமுகாமில் பாடசாலை கடைகள் தபால் நிலையம் என்பன் அமைக்கப்பட்டுள்தாக தெரிவித்தார். முட்கம்பி வேலி அயலிலள்ள கிராம மக்களில் வேண்டுகோளிலேயெ அமைக்கப்பட்டது எனவும் உலகிலுள்ள எல்லா அகதிமுகாம்களும் வேலியுடனதான் இருக்கிறது என ஆதாரங்களை காட்டினார். மூன்று வருடங்கள் இவர்களை கட்டாயமாக வைத்திருப்பது பற்றி கேட்டபோது அது தவறுதலான செய்தியெனவும் மீள்குடியேற்றம் ஏப்பிரல் மாதம் துவங்கிவிடுமெனவும் மூன்று வருடத்தில் சகலரும் குடியேற்றப்பட்டுவிடுவார்கள் என்பதே சரியான செய்தி. இதை ஊடகங்கள் தவறாகப் புரிந்துகொண்டு எழுதியுள்ளார்கள் எனத் தெரிவித்தார்.
யுத்தத்தில் அகப்பட்டுள்ள மக்களுக்காக தற்காலிக யுத்தநிறுத்தத்தை ஏன் அரசு அறிவிக்கக்கூடாது எனக் கேட்கப்பட்டது. அதற்கு தாங்கள் எப்பொதும் தயாராக இருப்பதாகவும் ஒரு பொது அமைப்பூடாக அவர்களை வெளியேற்ற இப்போதும் புலிகளிடம் பேசிக்கொண்டிருப்பதாகவும் குறிப்பிட்டார். அத்தோடு இனறுவரை மிக கடினமான முயற்சிகளுடாக அகப்பட்ட மக்களுக்கு உணவும் மருந்தும் அரசு மட்டுமே அனுப்பிக்கொண்டிருப்தாக தெரிவித்தார். அனுப்பும் பொதிகளின் அளவுகளில் புலிகள் கட்டுப்பாடு வைத்திருப்பதால் பெரும்தொகையாக அனுப்பமுடியாமலிரப்தாகவும இப் பொருட்களெல்லாம் இலவசமாகவே மக்களுக்கு வினியோகிக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.
யுத்தநிறுத்ம் பற்றிய சாத்தியக்கூறுகள் பற்றிக் கேட்டபோது, புலிகள் ஒரு தருணத்தில் ஆயுதங்களை கைவிட்டு பேச தயாரானபோது சில வெளிநாட்டு ஆலோசனையின் பேரில் அவர்களின் மூன்றுபேர் கொண்ட வெளிநாட்டு பிரிவு தொடர்ந்து சண்டையிட பணித்ததாகவும் இதனால் யுத்தநிறுத்தத்திற்குரிய சாத்தியம் தவறவிடப்பட்டதாகவும் தெரிவித்தார்.
இதுபோன்ற பல தமிழர்களைப் பாதிக்கின்ற விடங்கள் பேசப்பட்டு இறுதியில் தமிழ் பிரதிநிதிகளின் கோரிக்கை எழுத்தில் பசில் ராஜபக்சவிடம் வழங்கப்பட்டது. நிச்சயாக அரசு அதை பரிசிலித்து ஆவன செய்யுமென உறுதியளிக்கப்பட்துடன் கூட்டம் நிறைவெய்தியது.
- சந்திரகாசன்






0 விமர்சனங்கள்:
Post a Comment