இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் நாராயணன் மற்றும் இந்திய வெளியுறவுச் செயலாளர் சிவ்சங்கர் மேனன் கொழும்பு வந்துள்ளனர்.
நிலவரம் தொடர்பில் விவாதிப்பதற்காக இந்தியப் பிரதமர் தலைமையில் அமைச்சர்கள் மட்டத்திலான இரண்டு கூட்டங்கள் கடந்த இரண்டு நாட்களில் புதுடில்லியில் நடைபெற்றுள்ளன
அதில் இலங்கையில் உடனடியாகப் போரை நிறுத்த வேண்டும் என்றும், போரினால் இலங்கையில் அப்பாவி மக்கள் கொல்லப்படுவது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங் வலியுறுத்தியுள்ளார்.
இக் கூட்டத்தின் முடிவில் வெளியிடப்பட்டுள்ள இந்திய வெளியுறவுத்துறை அறிக்கையில் இப்பிரச்சினை தொடர்பாக வெளியுறவுத்துறை செயலர் சிவசங்கர்மேனன், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணன் ஆகியோரை சிறப்புத் தூதுவர்களாக அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது.
இலங்கை நிலவரம் தொடர்பில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி பிரிட்டிஷ் வெளியுறவுத் துறை அமைச்சர் டேவிட் மிலிபாண்ட்டுடன் தொலைபேசியில் உரையாடியுள்ளார்.
மக்கள் மோதல் பிரதேசத்திலிருந்து வெளியேறி பாதுகாப்பான பகுதிகளுக்கு வரும் வரை தாக்குதல்களை நிறுத்தி வைக்க வேண்டும் என்று இலங்கை அரசாங்கத்திடம் கேட்டுக் கொள்வதாக இந்திய வெளியுறவு அமைச்சர் கூறியுள்ளார்.
இலங்கையின் இனப்பிரச்சினைக்கு இராணுவத் தீர்வு மட்டுமல்ல, அரசியல் தீர்வு ஒன்றும் எட்டப்படவே வேண்டும் என்பதை இலங்கையிடம் இந்தியா மீண்டும் மீண்டும் வலியுறுத்தி வந்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்






0 விமர்சனங்கள்:
Post a Comment