'இலங்கை விவகாரத்தில் இருவேறு வழிகளில் நடவடிக்கை'-அமெரிக்க அரசுத்துறை
இலங்கையில் மனிதாபிமான நிலைமைகளை மேம்படுத்துவதற்கான நடவடிக்கையில், நிறைய செய்ய வேண்டியிருப்பதாக அமெரிக்க அரசுத்துறைச் செயலர் ஹிலாரி கிளிண்டன் அவர்கள் கூறியுள்ளார்.
வாஷிங்டனில் பிரிட்டிஷ் வெளியுறவு அமைச்சர் டேவிட் மிலிபாண்ட் அவர்களுடன் கூட்டாக நடத்திய செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் உரையாற்றிய கிளிண்டன் அவர்கள், அங்கு நடக்கின்ற மோதல்களில் அகப்பட்டுள்ள மக்களை பாதுகாப்பாக அங்கிருந்து வெளியேற்றுவதற்கு உதவ முயற்சிக்க வேண்டியுள்ளது என்றார்.
இதற்கிடையே இலங்கை விவகாரம் தொடர்பில் அமெரிக்க அரசுத்துறை இரு வேறு வழிகளில் பல நடவடிக்கைகளை எடுத்து வருவதாக அமெரிக்க அரசுத்துறையின் சார்பில் பேசவல்ல அதிகாரியான இயான் கெலி கூறியுள்ளார்.
தினசரி செய்தியாளர் சந்திப்பில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கும் வகையில் உரையாற்றிய அவர், இரு வேறு வழிகளில் அரசுத்துறை இதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருவதாக குறிப்பிட்டார்.
இந்த இராஜதந்திர முயற்சிகளை பொறுத்தவரை முதல் வழியாக ஐக்கிய நாடுகள் சபையின் ஊடாகவும், ஏனைய நாடுகளின் அரசாங்கங்களுடனும் அமெரிக்க அரசுத்துறை பேச்சுவார்த்தைகளை நடத்தி வருவதாக அவர் குறிப்பிட்டார்.
இரண்டாவது வழிமுறையாக இலங்கை அரசாங்கத்துடன் நேரடியாக தொடர்புகளை ஏற்படுத்தி, கனரக ஆயுதங்களை பயன்படுத்துவதை தடுப்பதற்கும், அங்குள்ள அகதிகளுக்கான முகாம்களை சர்வதேச தரத்துக்கு மேம்படுத்துவதற்கான அழுத்தங்களை கொடுப்பதற்கும் முயற்சிப்பதாகவும் அவர் கூறினார்.
BBC Tamil






0 விமர்சனங்கள்:
Post a Comment