இலங்கைக்கு விஜயம் செய்துள்ள பிரிட்டிஷ் நாடாளுமன்றக் குழு
இலங்கையின் வடக்கு மோதல்களால் பாதிக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கான மக்களின் பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடுவதற்காக இலங்கை சென்றுள்ள பிரிட்டிஷ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு ஒன்று இலங்கை அரசியல்வாதிகளுடனும், சமூகப் பெரியவர்களுடனும் பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளது.
பிரிட்டனின் பல கட்சிகளையும் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடம்பெறுகின்ற இந்த குழுவில் பிரிட்டனின் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் டெஷ் பிரவுணும் இடம்பெறுகிறார்.
இலங்கைக்கான சிறப்புப் பிரதிநிதியாக இவரை பிரிட்டிஷ் பிரதமர் கோர்டன் பிரவுண் அறிவித்திருந்தார். ஆனால் இலங்கை அரசாங்கம் அதனை முன்னதாகவே ஏற்க மறுத்து விட்டது. தற்போது ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் மாத்திரந்தான் அவர் இந்தக் குழுவில் இடம்பெறுகிறார்.
5 பேரைக் கொண்ட இந்த குழுவினர் வடக்கில் உள்ள அகதிகளின் முகாம்களுக்கு சென்று நிலைமைகளை ஆராய்வார்கள் என்றும், அது தொடர்பாக கலந்துரையாடல்களை நடத்துவார்கள் என்றும் இலங்கைக்கான பிரிட்டிஷ் தூதரகம் கூறியுள்ளது.
இந்த குழுவில் இடம்பெறுகின்ற பிரித்தானிய கன்சேர்வேட்டிவ் (பழமைவாத கட்சியின்) உறுப்பினரான ஜோண் பேர்க்கோவ் அவர்கள், இந்த குழுவின் உறுப்பினர்கள் தம்மை இலங்கையின் நண்பர்களாகவே கருதுவதாக கூறியிருக்கிறார்.
ஆனால், பிரிட்டன் மற்றும் ஏனைய மேற்கு நாடுகள் குறித்து இலங்கை அரசாங்க வட்டாரங்கள் அண்மையில் வெளியிடும் கருத்துக்கள் அந்த நாடுகளுக்கு எதிரானவையாக இருக்கின்றன.
கடந்த வாரத்தில் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டு, அங்கு உடனடியாக யுத்த நிறுத்தம் வரவேண்டும் என்று அழைப்பு விடுத்த பிரிட்டிஷ் வெளியுறவு அமைச்சர் டேவிட் மிலிபாண்ட் மற்றும் பிரஞ்சு வெளியுறவு அமைச்சர் குஷ்னர் ஆகியோரின் கோரிக்கையை விடுதலைப்புலிகள் பாராட்டியுள்ளனர்.
தற்போது தம்வசம் எஞ்சியுள்ள மிகச்சிறிய பகுதியில் முடக்கப்பட்டுள்ள விடுதலைப்புலிகளால் வெளியிடப்பட்டுள்ள சமாதான நோக்கம் கொண்ட அறிக்கை ஒன்றில், பிரிட்டனும், பிரான்ஸும் தமது முயற்சிகளை தொடர வேண்டும் என்று கேட்டிருக்கிறார்கள். தமிழ் மக்களால் எதிர்கொள்ளப்படுகின்ற மனித நேய அவலங்களைப் பற்றி குரல் கொடுத்ததற்காக இந்த வெளியுறவு அமைச்சர்களுக்கு விடுதலைப்புலிகள் நன்றியும் கூறியுள்ளனர்.
ஒரு விளம்பர நோக்கில் மேற்கத்தைய நாடுகளை விடுதலைப்புலிகள் ஊக்குவிக்கும் அதேவேளையில், மேற்கு நாடுகளால் கோரப்படுகின்ற யுத்த நிறுத்தம் விடுதலைப்புலிகளுக்குத்தான் உதவும் என்று இலங்கை அரசாங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது.
பெயர் குறிப்பிடாத சில வெளிநாடுகள் எங்களுக்கு பாடம் படிப்பிக்க முயற்சிக்கின்றன என்று கடந்த வாரம் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறியிருந்தார். அவரது சகோதரரான, பாதுகாப்புச் செயலர் கோட்டாபாய ராஜபக்ஷ டெயிலி டெலிகிராப்புக்கு பேசுகையில், இத்தகைய தூதுவர்களால் நாங்கள் எங்கள் நேரத்தை வீணடிக்கிறோம் என்று கூறியுள்ளார்.
அதேநேரம் பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய வெளியுறவு அமைச்சர் டேவிட் மிலிபாண்ட் அவர்கள், பயங்கரவாத அமைப்புக்கள் மக்களை கொல்லும் வேலையை செய்யும் போது, அவர்களை காப்பாற்றத்தானே ஜனநாயக அரசாங்கங்கள் இருக்கின்றன என்று கூறியுள்ளார்.
ஆகவே இலங்கையில் நடக்கும் மோதல்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
BBC Tamil






0 விமர்சனங்கள்:
Post a Comment