பிரபாகரன் சுட்டுக் கொண்டு வரப்பட்டாரா? கொண்டு வரப்பட்டு சுடப்பட்டாரா? ஐயப்பாடுகளும், அதிருப்திகளும்.. நெளிவுகளும்… தெளிவுகளும்…!!!

தமிழீழ விடுதலைப் புலிகளின் தனிப்பெரும் தலைவராகவும், தளராத மனங்கொண்டவராகவும், எத்தனையோ சோதனைகளையும், எத்தனையோ மனிதர்களையும் நேருக்கு நேராக சந்தித்தவராகவும், எத்தனையோ களநிலைகளைக் கண்டவராகவும் வாழ்ந்து, நின்று, வீழ்ந்து மரணித்துப் போன திரு. வேலுப்பிள்ளை பிரபாகரனின் மரணம் இலங்கை நாட்டின் மக்களுக்கு பெரும் மகிழ்ச்சியை உண்டு பண்ணியிருப்பதை எம்மால் உணர முடிந்துள்ளது. பிரபாகரனின் மரண ஒளிப்பதிவு வீடியோவே இலங்கையின் அனைத்து மக்களும் தவறாது பார்த்த ஒரு காணொளியாக திகழ்வதாக கணிப்புகள் கூறியிருக்கின்றன. 2009.05.19 அன்று (நேற்று) புலிகளின் தலைவர் பிரபாகரனும், புலனாய்வுத்துறை பொறுப்பாளர் பொட்டம்மானும், கடற்புலித் தளபதி சூசையும் அம்பியூலன்ஸ் வண்டியொன்றில் தப்பித்து சென்று கொண்டிருந்த வேளையில், படையினரால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின் போது கொல்லப்பட்டதாகவும் அவரது உடலைக் கைப்பற்றியிருப்பதாகவும் இலங்கையின் அனைத்து வானொலி, மற்றும் தொலைக்காட்சி ஊடகங்கள் செய்திகளை அனல்பறக்க பரப்பிக் கொண்டிருந்தன.
இதன் காரணமாக இலங்கையின் பெரும்பாலான பகுதிகளின் வீதிகளிலும், தெருக்களிலும் கோடிக்கணக்கான பட்டாசுகள் வெடிக்கச் செய்யப்பட்டும், கூத்தும் கும்மாளங்களும் மேற்கொள்ளப்பட்டும் வெற்றிக் களிப்புக்கள் விமரிசையாக கொண்டாடப்பட்டதை உணரக்கூடியதாக இருந்தது. அதேபோல் அந்த வெற்றியை பறைசாற்றும் முகமாக ஒருசில இடங்களில் சிங்கக் கொடிகளும், இன்னும் பல இடங்களில் பௌத்தக் கொடிகளும் ஏற்றப்பட்டதையும் எம்மால் காணக்கூடியதாக இருந்தது. பெரும்பான்மை இளைஞர்கள் தெருக்களில் இறங்கி கூத்துக்களும், கும்மாளங்களும் என்று நாகரீகமாகவும், அநாகரீகமாகவும் ஆட்டம் போட்டதையும், சிலவேளைகளில் அவர்களிடமிருந்து இனரீதியான பாகுபாட்டு சந்தோஷங்கள் வெளிப்பட்டதையும் கூட எம்மால் உணர முடியுமாக இருந்தது. ஆக, இத்தனைக்கும் காரணம் ஒரு துப்பாக்கிச் சன்னம் மூலமாக மண்டையோடு சிதறச் செய்யப்பட்டு, விழித்த கண்ணும், ஏங்கிய எண்ணமுமாக மரணித்துப் போன புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் உடலம்தான் என்றால் அது திண்ணமே.
ஒரு ரணகளமான யுத்தக்களத்தில், ரவைகள் துளைக்காத உடம்போடு, தலையில் மட்டும் ஒரு துப்பாக்கி ரவை துளைத்திருக்க, எதிரிகளின் தலைவர் கொல்லப்பட முடியுமா? என்றால், அது நிச்சயமாக இல்லையென்றே பதில்வரும் வினாவாகும். அம்பியுலன்ஸ் வண்டியொன்றில் படுவேகத்தில் தப்பிச் சென்று கொண்டிருந்தவர் மீது தலையில் மட்டும் ஒரு துப்பாக்கிவேட்டுடன் கொல்லுதல் இயலுமான காரியமா? அதுவும் நடு நெற்றிப்பொட்டில் வைத்து கொல்லுதல் முடியுமா? முடியும் என்றால் படையினரை நோக்கியா தப்பிச் சென்று கொண்டிருந்தார் பிரபா நெற்றிப் பொட்டில் வைத்துக் கொல்லுவதற்கு!? இப்படியாக, பாதுகாப்புத் தரப்புக் கூறிய பிரபாவின் கொலைச் சம்பவம் எங்கும், எப்படியும் பொருந்துவதாகவே இல்லை. ஆக புலிகளின் தலைவர் பிரபாகரனின் கொலை நிகழ்ந்தது எப்படி??!!..
இனிமேல் போராடுதல் முடியாது என்று உணர்ந்து கொண்ட பிரபாகரனும் அவரது உயர்நிலைத் தளபதிகள் ஐவருமாக மொத்தம் ஆறுபேர் கடந்த சனிக்கிழமை தினத்தன்று ஆயுதங்களைக் கைவிட்டு படையினரிடம் சரணடைந்திருக்கின்றனர். (பிரபாகரனின் சரித்திரம் முடிந்தது என்பதை சனிக்கிழமையே அதிரடிக்கு உறுதியான நம்பகரமான தகவலின் மூலம் தெரிய வந்தது) பிரபாகரனின் சரித்திரம் முடிந்தது என்பதை அன்றையதினம் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாட்டில் இல்லாத காரணத்தினால், அவர்கள் அத்தகவல்களை வெளியிடாது அவர் வரும்வரை காத்திருந்தனர்.
இத்தருணத்திலேயே நேற்றுமுன்தினம் ஜோர்தான் சென்றிருந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாடு திரும்பி, இலங்கை மண்ணை முத்தமிட்டு இலங்கையில் காலடி வைத்தார். அதன் பின்னர் தகவல்கள் வெளியிடப்படும் என்று எல்லோரும் காத்திருந்த வேளையிலேயே நேற்று பிரபாகரன் அம்பியுலன்ஸில் தப்பிச் சென்று கொண்டிருந்த வேளையில் படையினரின் தாக்குதலில் கொல்லப்பட்டதாக செய்திகள் கூறின. ஆனால் உண்மையில் நேற்று போர் நடைபெறவும் இல்லை, பிரபாகரன் தப்பிச் செல்லவுமில்லை, படையினர் தாக்குதல் நடத்திக் கொல்லவுமில்லை. நடந்தது சரணடைந்திருந்த புலிகளின் தலைவரையும், அவரது சகாக்களையும் மண்டைப்பொட்டில் குறி போட்டு கொன்றது ஒன்று தான்.
கடந்த 16ஆம் திகதி பத்திரிகைகளில் வெளியான செய்தியொன்றில் குறிப்பிடப் பட்டிருந்ததாவது, “சமாதான உடன்படிக்கை அமுலிலிருந்த காலப்பகுதியில் புலிகளினால் கைது செய்யப்பட்டு, தடுத்து வைக்கப்பட்டிருந்த கடற்படை வீரர்கள் நான்குபேரும், இராணுவத்தினர் மூன்று பேருமாக ஏழுபேர், மக்கள் பாதுகாப்பு வலயப் பகுதியை நோக்கி முன்னேறிச் சென்று கொண்டிருந்த படையினரால் மீட்கப்பட்டுள்ளனர் என்பதாகும்.” இந்த அடிப்படையில் புலிகள் தாம் கைது செய்த சாதாரண நிலையிலான படையினரையே கொலை செய்யாது இத்தனை காலமும் தடுத்து வைத்திருந்துள்ள நிலையில், ஒரு இயக்கத்தின் தலைவரை, பல்வேறு வழக்குப் பதிவுகளுடன் தொடர்புடைய ஒருவரை, அதுவும் யுத்தத்தின் போது சரணடைந்த ஒருவரை கொல்வதென்பது ஒரு யுத்தக் குற்றமாக இருந்து கொண்டிருக்கின்றது. இருந்தபோதும், பிரபாகரன் செய்த குற்றங்களின் காரணமாக அவருக்கெதிராக போடப்பட்டிருக்கின்ற வழக்குகளின் இறுதித்தீர்ப்பும் சாகும்வரை தூக்கில் போடுவதாகவே இருக்க முடியும் என்பதும் இங்கு மறுக்க முடியாத ஒன்றுதான்…
அண்மையில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவிடம் கேட்கப்பட்ட கேள்வியொன்றின் போது, பிரபாகரனிற்கு மன்னிப்பு வழங்குவதென்பது என் அகராதியில் கிடையவே கிடையாது என்றும் அதை வழங்க இலங்கை ஜனாதிபதி ஒருவரினால் மட்டுமே முடியும் என்றும் உறுதிபடத் தெரிவித்திருந்தார். ஆக இலங்கை ஜனாதிபதி ஜோர்தானில் இருந்து வந்ததும் பாதுகாப்பு செயலர் கோத்தபாய ராஜபக்ஷவிற்கும், இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கும் இடையிலாக இந்த மன்னிப்பு குறித்த விவாத, வியூகங்கள் மேற்கொள்ளப்பட்டு இறுதியிலேயே பிரபாகரனின் நடுமண்டையில் குறிவைக்கப்பட்டு கொலை செய்யப் பட்டிருக்கின்றார் என்பது எமக்கு தெளிவாக புலனாகின்ற அதேவேளையில், சில காலங்களுக்கு முன்பு கோத்தபாய ராஜபக்ஷ மீது விடுதலைப் புலிகள் மேற்கொண்ட தற்கொலைத் தாக்குதலில் அவர் மயிரிழையில் சிறு இரத்தக் காயங்களுடன் உயிர் பிழைத்ததும், அதன் பின் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தன் சகோதரரான கோத்தபாய ராஜபக்ஷவை கண்ணீர் மல்க கட்டியணைத்து அழுததும் ஞாபகத்திற்கு வருகின்ற போது, பிரபாகரனின் நடுமண்டையில் குறிவைத்துக் கொண்றதும், இவர்களின் அன்றைய பாசக் கட்டியணைப்பும் ஏதோ ஒரு வகையில் பொருந்துவதாகவே தோன்றுகின்றது..!!!!
-உண்மைவிளம்பி..-
நன்றி: அதிரடி இணையம்






0 விமர்சனங்கள்:
Post a Comment