இன்று:
 
தேர்தல் முடிவுகள் 2010 Presidential Election Results - 2010

Saturday, June 13, 2009

தமிழ்ச்செல்வனுமா துரோகி?

என்னதான் உண்மையை மறைத்தாலும் என்றாவது ஒரு நாள், அதுவும் ஆகக்கூடியது கார்த்திகை 27ம் நாளுக்கு முன்னர் விரும்பியோ விரும்பாமலோ வாந்தியெடுத்தே ஆக வேண்டிய கட்டாய நிலை புலிப்பினாமிகளுக்கு இருக்கிறது.

மெல்ல, மெல்ல உண்மைகளைக் கக்குவார்கள் என்பது புலியையும் அவர்களது, பிரச்சார தர்மங்களையும் அறிந்த அனைவராலும் எதிர்பார்க்கப்பட்ட ஒன்றாக இருந்தாலும், இது எல்லை மீறிய ஒன்றாக இல்லையா?

தமிழ்ச் செல்வன் என்ன பிரபாகரன் போல எதிரியின் காலடியில் போய் மண்டியிட்டுத் தன் தலையைக் கொத்திக்கொள்ளக் கொடுத்த கோழையா?

பல தடவைகள் புலியாலேயே தண்டிக்கப்பட்டு, புலியாலேயே இறுதியில் காவும் கொடுக்கப்பட்ட இன்னொரு மனித உயிர் ஆயிற்றே?

உணர்ச்சிவசப்படப்போகும் புலி ஆதரவாளர்கள், ஒரு நிமிடம் நிதானிக்கவேண்டிய கட்டாயம் இங்கு இருக்கிறது.

உண்மையின் நிர்ப்பந்தம்

“புதினம்” பல காலங்களாக புலிகளின் உத்தியோகபூர்வ தமிழ் இணையமாகச் செயற்பட்டு வரும் இணையமாகும்.

தலைவரின் காலடியில் குண்டு பாய்வதற்கு முதல் நாள் வரை பல வகை ” பிரபாகரன் நலன் சார்ந்த ” உண்மைச் செய்திகளை எழுதி வந்த புதினம், அவர் இறப்பதற்கு ஓரிரு நாளுக்கு முன்னர் “தமது நிருபர் இறுதியாக வழங்கிய செய்தியென்று ஒன்றையும்” இதன் பின் வேறு செய்திகளை களத்தில் இருந்து வழங்க முடியாது என்று அவர் கூறியதாகவும் பிரசுரித்திருந்தது.

இந்நிலையில், அங்கிருந்தவர்களிலேயே பிரபாகரனிடம் மட்டும் தான் இறுதி வரை ஒரு செய்மதித் தொலைபேசி கையில் இருந்தது என்கிற உண்மையை வைத்துப்பார்க்கும் போது, பிரபாகரன் தான் புதினத்தின் நிருபரா என்றும் ஒரு கேள்வி எழுகிறது.

எது எப்படியோ, தலைவருக்கு ஆப்பு நெருங்கி விட்டது என்று மற்ற அனைவரையும் விட புதினத்துக்கு நன்றாகத் தெரிந்திருக்க வாய்ப்பிருந்த போதும், அதை மறுத்துரைப்பதில், ஜுன் 10ம் திகதி வரை பகீரதப் பிரயத்தனம் மேற்கொண்டு, தம் இந்நாள் தலைவர் கே.பியுடன் கூட முரண்பட்டு, அறிவழகன் என்று ஒருவரை உருவாக்கி அவருக்காகவே ஒரு வெளியுறவுப் புலனாய்வு டிபார்ட்மென்டையும் அங்குரார்ப்பணம் செய்து வைத்திருந்தது.

இந்நிலையில், நாய் வேசம் போட்டதற்காகக் குரைத்தாலும், கட்டிவைக்கப்பட்டிருக்கும் நாய் குரைத்துக்கொண்டுதான் இருக்க முடியும் எனும் அளவில், உண்மையை மறைக்க என்னதான் பொய்யுரைத்தாலும் இறுதியில் ஏற்றுக்கொள்ளும் கட்டாயம், அதாவது நிகழ்கால உண்மைகளால் இறுகக் கட்டப்பட்ட நிலையை அடைந்த போது, அவர்களின் செயற்பாடுகளில் சில மாற்றங்கள் ஏற்பட்டது.

அநதக் கட்டாய மாற்றத்தின் நிர்ப்பந்தத்தில் முன்னாலே சென்றோரின் பின்னால் சென்றவரின் வழியினிலே… ஈழப் போர் – 3! என்று ஒரு தலைப்பில் ஜுன் 10ம் திகதியிட்டு ஒரு கட்டுரையைப் பிரசுரித்ததன் மூலம், முதற் தடவையாக பிரபாகரன் இறந்தார் என்று புதினம் சாட்சி கூறியது.

இதைத் தொடர்ந்து பல இணையங்களில் இதன் மூலம் இவர்கள் உண்மையின் பால் நிர்ப்பந்திக்கப்பட்ட விடயத்தை எடுத்துக்கூறிய அதே வேளை, எஞ்சியிருக்கும் புலி விசுவாசிகளோ தம்மைத்தாம் ஆறுதல் படுத்திக்கொள்ள சம காலத்தில் வெளியாகிய ஜுனியர் விகடனின் கற்பனைக் கட்டுரையொன்றை கட்டிப்பிடித்துக்கொண்டார்கள்.

இது புலி ஆதரவாளர்களின் வழக்கமான செயற்பாடுதான்.

யாராவது தம்மைப் போற்றினால் அவர்களைத் தூக்கித் தலையில் வைப்பதும், பின்னர் அவர்களைத் தாக்கி நாறடிப்பதும் அவர்களுக்குக் கை வந்த கலை.

அதற்கு மாறாக, என்ன காரணத்திற்காக இவர்கள் திடீர் திடீர் என்று இப்படியெல்லாம் தம்மை உணர்ச்சிவசப்படுத்துகிறார்கள் என்று ஒரு நாளும் சிந்தித்ததில்லை, அப்படி சிந்தித்திருந்தால் ஒருவேளை தமிழீழம் கூட எப்போதே கிடைத்திருக்கும்.

எனவே, மந்தையாக இருத்தலையே அவர்கள் விரும்பும் போது, அவர்களை மந்தைகளாக மற்றவர்கள் நடத்துவதில் தப்பிருப்பதாகத் தெரியவில்லை.

மனித விரோதம்

எந்த ஒரு சந்தர்ப்பத்திலும், தமது பிரச்சார செயற்பாடுகளை மிகக் கவனமாகத் தேர்ந்தெடுத்துத் தம் ஆதரவாளர்களிடம் இருந்து கிடைக்கும் நிதி வரவுகளைப் பாதிக்காத வகையில் பிரச்சாரம் செய்வதே புலிகளின் தொடா பிரச்சார வெற்றிகளின் அடிப்படையாகும்.

அவ்வாறான ஒவ்வொரு கட்டத்திலும், அவர்கள் நலன் வெற்றி பெற வேண்டுமென்றால் வேறு யாரை வேண்டுமானாலும், எவ்வாறு வேண்டுமானாலும் கேள்விக்குறியாக்குவதற்குத் தயங்க மாட்டர்கள்.

புதினத்தின் நிருபர் பிரபாகரனாக இருந்திருந்தாலும் இல்லாவிட்டாலும், புதினம் மற்றும் தமிழ்நெட் தளங்களின் பிரச்சாரம் மூலம் முழு நன்மையடைந்த புலிப் போசகர்களின் பிரதான விற்பனைப் பொருள் “பிரபாகரன்” ஆகும்.

“பிரபாகரன்” எனும் வி்ற்பனைப்பொருளின் சந்தை விலையை உயர்த்தி வைத்திருப்பதன் மூலமே தமது வருமானத்தை உயர் நிலையில் வைத்திருக்கலாம் எனும் அவர்களது அடிப்படைக் கொள்கையின் பேரில் கடந்த பல காலங்களாக இந்த வியாபரத்தை வெற்றிகரமாக அவர்கள் செயற்படுத்தி வந்தார்கள்.

பிரபாகரன் எனும் பொருளின் சந்தை விலை இனி தேறாது என்று அறிந்ததனால் தான் அவர்களே அந்தப் பொருளை அழிப்பதற்கான அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்தார்களோ எனும் சந்தேகம் இன்னும் அசையாமல் நிற்கிறது.

இதற்கான சாத்தியங்களும் எந்த நிலையிலும் மறுப்பதற்கில்லை.

எனவே, பிரபாகரன் எனும் விற்பனைப் பொருளைக் கவனமாகப் பேணிப் பாதுகாத்து வந்த இந்தப் பிரச்சார வித்தகர்களின் தயவால் இப்போதும் எஞ்சியிருக்கும் ஒவ்வொரு புலி ஆதரவாளனின் மனதிலும் இன்னும் பிரபாகரன் வாழ்ந்து கொண்டிருக்கலாம்.

ஆனாலும், அவர்களுக்கு அதில் பிரயோசனம் இல்லை என்பதால் அதை அழித்துவிட்டார்கள்.

ஆனாலும், புதியதொரு சந்தை விலை உள்ள விற்பனைப் பொருளை உருவாக்கும் வரை மீண்டும் மீண்டும் அவர்களால் ஊட்டி வளர்க்கப்பட்ட பிரபாகராயிசத்தை விட்டு வெளியேற முடியாமல் திக்குத் திணறுகிறார்கள்.

இந்நிலையில் பிரபாகரன் எனும் அவர்களது விலைப்பொருள் அழிந்து விட்ட உண்மையை ஏற்றுக்கொள்ளும் அதே வேளை அந்த அழிவிற்கு அது காரணமில்லை, அதைச் சுற்றியிருந்த வேறு யார் யாரோதான் காரணம் என்று அவர்களாலேயே காவு கொடுக்கப்பட்ட தமிழ்ச்செல்வன் போன்றோரைக் கேள்விக்குறியாக்குவது மிகப் பெரும் மனித விரோதச் செயலாகும்.

இப்படி அவர்களைக் கேள்விக்குறியாக்குவதன் மூலம் வெளியுலகில் இருந்து புலியெனும் இயந்திரத்தையும், பிரபாகரன் எனும் சந்தைப்பொருளையும் இயக்கிய “சக்திகள்”, இறுதி வரை அவருக்கு வாக்குறுதிகளைக் கொடுத்து நம்ப வைத்துக் கழுத்தறுத்ததை, மன்னிக்கவும் தலையுடைத்ததை மறைக்கவும் மக்களின் மனதில் இருந்து மறக்கடிக்கவும் மிகக் கச்சிதமாகத் திட்டமிட்டிருக்கிறது.

அதன் அடிப்படையில், தம் தலைவனை மாவீரனாகச் சித்தரித்து எல்லாம் கதையளந்து விட்டு, அதே தொடரில் :

கடைசிக் காலத்தில் என்னவிதமான சிந்தனைகள் அவரது மனதில் ஓடியிருக்கும் என்ற யோசனை எழுவதை என்னால் (கட்டுரையாளர்) தடுக்க முடியவில்லை.

தமிழர் பேராட்டத்தில் நீதியும் தர்மமும் இருந்தும் ஏன் எல்லாம் இவ்வாறு அழிந்து போய் விட்டது என்று யோசித்திருப்பாரா?…

அல்லது – ‘நீதியும் தர்மமும் இந்த உலகை இயக்குவதில்லை; வல்லரசுச் சக்திகளின் கேந்திர நலன்கள் சார்ந்து மாறி வரும் உலக ஒழுங்கிற்கு ஏற்ப நாமும் மாற்றங்களைச் செய்து இயங்க வேண்டும்’ என்று பாலா அண்ணை திரும்பத் திரும்பச் சொல்லிய ஆலோசனைகளைக் கிரகித்திருந்தால் இந்த நிலை வந்திருக்காது என்று நினைத்திருப்பாரா?…

அல்லது – வெளிநாட்டுப் பயணங்களை முடிந்துக்கொண்டு ஒவ்வொரு முறையும் தன்னிடம் திரும்பி வரும் தமிழ்ச்செல்வன், மாறி வரும் உலகின் போக்கு பற்றி சரியான தகவல்களைத் தராமல் தன்னைத் தவறாக வழி நடத்திவிட்டார் என்று நினைத்திருப்பாரா?…

அல்லது – உறுதியான ஒர் அரசியல் அடித்தளத்தைப் போடாமல், இராணுவ இயந்திரத்தை மட்டுமே கட்டி வளர்த்ததால் – தமிழினத்தின் அரசியல் விடுதலைக்கான போராட்டத்தை இராணுவ பலத்தை மட்டுமே அடிப்படையாக்கி வளர்த்ததால் – இன்று அந்த இராணுவக் கட்டமைப்பு உடைந்து நொருங்கும் போது – தமிழ்த் தேசிய இனத்தின் எதிர்காலமே நொருங்கி விழுகின்றது என்று உணர்ந்திருப்பாரா?…

அல்லது – கடந்த காலங்களில் செய்யப்பட்ட சில விடயங்களைச் செய்யாது தவிர்த்திருக்க வேண்டும் என்றோ, செய்யாது தவிர்த்த சில விடயங்களைச் செய்திருக்க வேண்டும் என்றோ நினைத்திருப்பாரா?..

அல்லது – தவறுகள் பற்றிய எந்தச் சிந்தனையுமே இன்றி – எல்லாவற்றையும் தான் சரியாகவே செய்து, எல்லா முடிவுகளையும் தான் சரியாகவே எடுத்திருந்ததாக நம்பியிருப்பாரா?..

என்று ஒரு கருத்துத் திணிப்பை மிகக் கச்சிதமாக இடுகை செய்திருக்கிறார்கள்.

சர்வபலமும் உள்ள சிந்தனை வீரன், கடவுளின் அவதாரம் என்றெல்லாம் குறிப்பிட்ட பிரபாகரனைத தமிழ்ச்செல்வன் தவறாக வழிநடத்தியிருப்பாராமே? கேட்கவே நல்ல வேடிக்கையாக இருக்கிறது அல்லவா?

தலைவர் சொல்லாமல், தமிழ்ச் செல்வன் எதையுமே வாய் மலர்ந்ததில்லை என்று அவரைப் போற்றிய காலம் எல்லாம் மலையேறி, இப்போது தலைவரை தமிழ்ச்செல்வன் தவறாக வழிநடத்தியிருப்பாரோ என்கிற சந்தேகத்தை முன் வைக்கும் அளவுக்கு அவர்கள் வந்துவிட்டார்கள்.

அதே தொடரில் இந்த வியாபரிகள் மேலும் ஒரு இடத்தில் மிகக் கச்சிதமாக :

விடுதலைப் போராட்டம் பெற்ற அரசியல் வெற்றிகளின் பெருமை பாலா அண்ணையைச் சாரும்.

விடுதலைப் போராட்டம் பெற்ற இராணுவ வெற்றிகளின் பெருமை தீபன், பால்ராஜ், சூசை, பொட்டு, பாணு, ராஜூ, கே.பி…. என இன்னும் சிலரைச் சாரும்.

விடுதலைப் போராட்டத்திற்கு இயங்கு சக்தியைக் கொடுத்த பெருமை தமிழ்த் தேசிய இனத்தையும், அந்தச் சனத்திலிருந்து வந்த எம் போர் வீரர்களையும் சாரும்.

ஆனால் – சதிகளும், தோல்விகளும், துரோகங்களும், விலை போதல்களும், நெருக்கடிகளும் நிறைந்து கிடந்த மிகக் கரடு முரடான பாதை வழியாக – மனம் தளராமல் – விடுதலைப் போராட்டத் தேரை முன்னோக்கி ஓட்டிச் சென்ற பெருமை பிரபாகரனையே சாரும்.

என்று மீண்டும் புலி ஆதரவாளர்களின் காதில் பூச்சுற்றி அழகு பார்க்கிறார்கள் இந்தக் கேவலங்கெட்ட, பண ஆசை பிடித்த அறிவாளிகள்.

இந்தக் கருத்துத் திணிப்பின் பின்னால் மிக அவதானமாகக் கவனிக்கப்பட வேண்டியது, கே.பி எனும் நபரின் உள்ளீடு.

பிரபாகரன் மரணமான அன்றே இவரைப் பற்றி நாம் எழுப்பியிருந்த கேள்விகள் மீண்டும் மீண்டும் ஊர்ஜிதப்படுத்தப்படுகின்றன.

கருணாவின் பிரிவுக்குப் பிறகு உங்கள் விடுதலைப் போராட்டம் எந்தவொரு இராணுவ வெற்றியையும் தான் பெறவில்லையே? அப்படியானால் கருணாவின் பிரிவுக்கு முன்னர் நீங்கள் பெற்ற இராணுவ வெற்றிக்குக் கருணா கூட காரணமாக இணைக்கப்படலாம், கள்ளக்கடத்தல் கே.பி எப்படி காரணமானார்?

ஆயுதங்களைக் கடத்துகிறோம், இறுதிப் போருக்குத் தயாராகிக் கொண்டிருக்கிறோம் என்றெல்லாம் வெளிநாட்டில் வாழும் அனைத்து புலி இயந்திரங்களையும் முறுகல் நிலையில் வைத்து மக்களைப் பிழிந்தெடுத்து, அவர்களின் வியர்வையைக் காசாக்கி, உடைத்தெறிய வேண்டிய கப்பல்களை “ஆயுதத்தோடு அனுப்புகிறோம்” என்று தகவலை மக்களுக்கும் சொல்லி, இந்திய, இலங்கை அரசுகளுக்கும் காட்டிக்கொடுத்த உங்கள் வலைப்பின்னல் அவற்றை நடுக்கடலில் தகர்த்தெறிய வைத்து, அதிலிருந்து மீண்டும் அனுதாபத்தைத் தேடிக்கொண்டது.

ஆனால், தகர்த்தெறியப்பட்ட அனேகமான கப்பல்கள் சிறிதளவு ஆயுதங்களுடன் சென்று அவர்களே போட்டுக்கொடுத்து தகர்த்தெறியப்பட்ட கப்பல்கள் எனும் உண்மையை புலி ஆதரவாளர்கள் அறிந்து கொள்ள மிக நீண்ட காலம் தேவையேற்பட்டதனால் இவர்கள் தப்பிக்கொண்டார்கள்.

உண்மையான ஒரு போரை நடத்துவதற்குத் தேவையான அனைத்துத் தளபாடங்களும் புலிகளிடம் இருந்தது என்பது யாராலும் மறுக்க முடியாத ஒரு உண்மையாகும்.

அதற்கான ஆளணியும் அவர்களிடம் இருக்கவே செய்தது என்பது மறுப்பதற்கு நினைத்துப் பார்க்கவும் முடியாத ஒரு விடயமாகும்.

ஆனால், யுத்தம் மாவிலாறில் ஆரம்பித்தது முதல் பிரபாகரனின் தலைமைத்துவமும், தளபதிகளும் என்ன செய்து கொண்டிருந்தார்கள் என்று சிந்தித்துப் பார்த்தால், முன்னரங்குக்கு ஏழை மக்களின் பிள்ளைகளை அனுப்பிப் பலி கொடுத்துவிட்டு, அவர்களோ பின் வாங்கி பின் வாங்கி, அரசின் ஒப்புதலுடன் பாதுகாப்பு வளையம் அமைத்து அதற்குள் போய் ஓடி ஒளிந்துகொண்டார்கள்.

புலி என்றால் வானையும் பிளந்து கடவுளின் சிம்மாசனத்தையும் பறி்த்து வரும் ஆற்றல் உள்ளவர்கள் என்கிற பிரம்மை உலகத்தில் மிகக் கவனமாகத் திட்டமிடப்பட்டு வளர்த்து வரப்பட்ட புலி ஆதரவாளர்கள் எனும் மந்தைகளோ, எதிரி அகலக் கால் வைக்கிறான், புலி பதுங்கிப் பாயும், புதருக்குள் இருந்து பாயும் என்று வீரக் கதைகளும், அறிக்கைகளும், இணையத்தில் கருத்துப் போருமாக காலத்தைத் தள்ளினார்கள்.

யுத்தம் ஆரம்பித்து, இராணுவம் முன்னேறி முன்னேறி, பிரபாகரன் மூக்குக்கு நேரே துப்பாக்கியை வைக்கும் வரையிலும் அவர்களால் எதிர்த்துப் போர் புரிய முடியவில்லை, அதற்கான மனோ பலனும் இருக்க வில்லை.

எனவே, கோழைத்தனமாக பலியெடுக்கப்பட்டார்கள், அவமானப்படுத்தப்பட்டார்கள்.

அப்படியானால், தாம் யுத்தம் செய்வதை விடத் தம் உயிர்களைக் காப்பாற்றிக்கொள்வதில் பிரபாகரன் குழு மிக அவதானமாக இருந்ததும் உண்மையாகிறது, அதற்காக மக்களைக் கேடயமாக வைத்திருந்ததும் உண்மையாகிறது, ஆயிரம் ஆயிரம் போராளிகள் மற்றும் சாதாரண மக்களையும் பலி கொடுத்ததும் உண்மையாகவே நிரூபணமாகிறது.

வெறியின் உச்ச கட்டத்தில் தப்பிப்போகும் குழந்தைகளைக் கூட இவர்களால் நிம்மதியாக வாழ விட முடியவில்லை.

பலாத்காரமாகப் பிடித்துச்சென்ற குழந்தைகளில் ஆண்களுக்கு மொட்டையடித்தும், பெண்களுக்குக் கூந்தலை கட்டையாக வெட்டியும், இவர்கள் தான் “புலிகள்” என்று தப்பிப்போகும் கூட்டத்திலிருக்கும் அவர்களை இராணுவம் அடையாளங் கண்டு, இழுத்துச்சென்று வதைக்கவும், கொல்லவும், இன்னும் பல செய்யவும் புலிதான் திட்டமிட்டது.

இறுதித்தருவாயில் நீயும் தானே உயிருக்கு ஓடி ஒளிக்கிறாய்? அந்த எதிர்கால இளைஞர்கள் என்ன பாவம் செய்தார்கள்? உன் கோரப்பிடியில் இருந்த மண்ணில் பிறந்த ஒரே பாவத்திற்காக உன் உயிர் அழியும் போதும் அவர்கள் வாழ்க்கையைக் கேள்விக் குறியாக்கி, கேவலப்படுத்தி விட்டுத்தானே சென்றாய்?

மாறாக, உன் இளைய தலைமுறையையாவது கலைந்தோடும் மக்களோடு மக்களாகக் கலைந்து உயிரைக் காப்பாற்றிக்கொள்ளவாவது அனுமதித்தாயா? இல்லை ஒரு வேளை அவர்களிடம் நீ விதைத்த உணர்வு உண்மையாக இருந்தால் நாளையொரு நாள் அவர்களே போராடுவார்களே எனும் நம்பிக்கைதான் உனக்கு இருந்ததா?

எதுவும் இல்லையே? காரணம், நீங்கள் கட்டி வளர்த்தது ஒரு பிரம்மை உலகம் என்பது உங்கள் ஒவ்வொருவர் மனச்சாட்சிக்கும் தெரியும்.

எனவேதான், மக்கள் விரோதிகளாக நீங்கள் இறுதிவரை செயற்பட்டீர்கள், கோழைகள் போல் உயிரிழந்தீர்கள்.

இத்தனைக்கும் பின்னால் நின்று நிதானித்துப் பார்க்கும் போது, யுத்த களத்திற்கு என்றுமே சென்றிராத (கருணாவின் கூற்றுப்படி) பிரபாகரன், காண முடியாத தமிழீழம், அடைய முடியாத இலக்கை வைத்து நீங்கள் அனைவரும் வியாபராம் செய்தது தான் உண்மையாகிறது.

அந்த வியாபாரத்தின் உயர்ந்த விலைபொருளாக இருந்த பிரபாகரனும், தமிழ்ச் செல்வன் போலவே காவு கொடுக்கப்பட்டதுதான் உண்மையாக இருந்தாலும், தமிழ்ச் செல்வன் போல் ஒரு மரணம் பிரபாகரனுக்குக் கிடைக்கவில்லை.

கோழைத்தனமாக உயிருக்குப் பயந்து, தன் முன்னால் இருந்த அனைவரின் உயிரையும் காவு கொடுத்து, இறுதியில் தலையைக் கொய்த இடங்கொடுத்து மாண்டு போனார் பிரபாகரன் என்பது தான் உண்மை.

அவர் ஒரு விலை பொருள் என்பதால் அவரது கிராக்கியை ஏற்றுவதும் இறக்குவதும் வெளியில் இருந்து புலியை இயக்கிய சக்திகளின் கையில், குறிப்பாக கே.பியின் கையிலேயே இருந்தது.

அதன் அடிப்படையில் பிரபாகரன் எனும் விலை பொருள் அழிக்கப்பட்டதிலும் கே.பிக்குப் பங்கிருக்கிறது.

இப்போது, தோய்வடைந்திருக்கும் புலி ஆதரவாளர்களை எதையாவது சொல்லிச் சமாதானப்படுத்திக்கொள்ள பிரபாகரனை மாவீரனாக, உத்தியோகபூர்வமாக அறிவித்து, மிகக் கேவலமாக உங்களுக்காக உங்களால் காட்டிக்கொடுக்கப்பட்டு உயிரிழந்த மற்றவர்களை கேள்விக்குறியாக்குவது மனித விரோதம்.

பிரபாகரன் என்ற சந்தைப் பொருள் உயிரோடு இருக்கும் வரை எல்லாம் அவன் செயலாக இருந்தாலும், இப்போது புலி இயந்திரம் மூன்று வருடங்களுக்கு முன்னர் வரை அடைந்த வெற்றிகள் பங்கு பிரிக்கப்பட்டிருக்கின்றன.

அரசியல் வெற்றி முதல் அனைத்து வெற்றிகளும் முன்னர் போன்று பிரபாகரனின் ஏக பிரதிநிதித்துவத்திடம் கையளிக்கப்படாமல், உயிரிழ்ந்து போன அனைவரிடமும், மிகக் கச்சிதமாக உயிரோடு இருக்கும் கே.பியிடமும் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையிலாவது கே.பிதான் அடுத்த தலைவர் என்பதைப் புலி ஆதரவாளர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பது அவர்கள் நினைப்பாக இருக்கிறது.

கடந்தகாலங்களிலும் தமது இலக்கை, அதாவது வருமான இலக்கை அடைவதற்கு யாரை வேண்டுமானாலும்,எவ்வாறு வேண்டுமானாலும் தூற்றத்தயங்காத புலிப் பிரச்சார சக்திகள் அவர்கள் தேசியத் தலைவரே மாலை போட்ட தமிழ்ச்செல்வனையும் கேள்விக்குறியாக்கியிருக்கிறது, பிரபாகரனையும் அவரது சக்தியையும் மட்டுப்படுத்தி, வெற்றிகளைப் பிரித்துக் கொண்டிருக்கிறது.

எனவே, புலி இயந்திரம் எப்போதுமே “தமிழீழ” மாயையை வைத்து வியாபரமே செய்து வந்தது என்பதைக் களத்தில் அழிக்கப்பட்ட இராணுவப் புலிகள் போக, இன்னும் உயிரோடு இருக்கும் நிதி திரட்டும் புலிகள் மீண்டும் நிரூபித்திருக்கிறார்கள்.

இனிவரும் காலங்களிலும் இவ்வாறான பல வேடிக்கை அறிக்கைகள் வரலாம்.

ஆனால், ஒவ்வொரு அறிக்கையிலும் தவறாமல் பிரபாகரனுக்கு வீர வணக்கமும், கே.பியை நியாயப்படுத்தும் தீரத் திட்டங்களும் இணைக்கப்படும்.

சூசை பேராடித்தான் மடிந்தார் என்று இலங்கை இராணுவமே கூறிவிட்டது, ஆனாலும் இறப்பதற்கு முதல் நாள் இந்தக் கே.பி தான் இன்டர்போல் தேடும் அந்தக் கே.பி என்று சாட்சி கூறிவிட்டு காணாமல் போன சூசையும் மிக விரைவில் துரோகியாக்கப்படலாம்.

அதுவரை, மித மிஞ்சிய உணர்வில் வாழும் புலி ஆதரவாளர்கள் பிரபாகரன்,பொட்டம்மான் சகிதம் ஜுனியர் விகடனிடம் உங்கள் உணர்வுகளை விற்பனை செய்யலாம், ஏனெனில் காசு பார்ப்பதற்காக எதையும் எழுதும் கேவலமாக பத்திரிகைகளில், இன்றைய நிலையில், நக்கீரனுக்கு அடுத்தபடியாக ஜு.வி தான் இருக்கிறது.

உங்கள் உணர்வுகளின் இறுதி வியாபாரத்துக்காக அவர்கள் முயல்கிறார்கள், அவர்களை முந்திக்கொண்டு கே.பி அன் கோ முயல்கிறார்கள், நல்ல விலை யாருக்குக் கிடைக்கிறதோ அவருக்கு இலாபம்!

http://puthinam.com/full.php?2b36WXC4b33r6Jg04dcnSp2db0eEaEB34d3SVtF3e0dH6Po8ce03h5c32cc4Wi7bbe

அறிவுடன்

1 விமர்சனங்கள்:

Unknown June 20, 2009 at 6:44 PM  

IPPOTHU THAN THEREGIRATHU.IWANUKALUKAKA ORU KOOTAM. STUPID

BBC தமிழோசை

மீனகம்

தமிழ் அரங்கம்

அலைகள்

Nankooram

நெருடல்

About This Blog

Velupillai Prabhakaran

The rest of the world might never understand the violence Velupillai Prabhakaran stood for, but its imprint on Sri Lanka is wide and deep. For 26 years, the elusive leader of the Liberation Tigers of Tamil Eelam (LTTE) had waged war with the government to win an independent homeland, or eelam, for the island's Tamil minority. The struggle claimed more than 70,000 lives--including, on May 18, Prabhakaran's. The government says he was killed, along with 17 of his trusted lieutenants, while fleeing an army ambush.

Prabhakaran, 54, was born to a middle-class family on the Jaffna Peninsula. Incensed by discrimination against Tamils and radicalized by a militant grade-school teacher, Prabhakaran founded the LTTE in 1976, a year after a group he headed claimed responsibility for killing Jaffna's mayor. By 1983 the guerrilla movement--which pioneered suicide bombings and the recruitment of child soldiers--escalated the fighting into a civil war.

At the height of his power earlier this decade, Prabhakaran led a de facto government that controlled vast swaths of territory and boasted its own systems of taxes, roads and courts. As the army closed in, he allegedly used thousands of Tamil civilians as human shields. By the final days, just 250 LTTE members remained. They died too, along with the dream of eelam.

Blog Archive

சினிமா தகவல்கள்

வீரகேசரி இணையதள செய்தி தலைப்புகள்

Puthinam

அதிர்வு இணையதள செய்தி தலைப்புகள்

குளோபல் தமிழ் இணையதள செய்தி தலைப்புகள்

சங்கதி இணையதள செய்தி தலைப்புகள்

கூகிள் இணையதள செய்தி தலைப்புகள்

Thatstamil - தற்ஸ்தமிழ்

தமிழ்செய்தி இணையம்

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ Scroll to Top