இன்று:
 
தேர்தல் முடிவுகள் 2010 Presidential Election Results - 2010

Tuesday, October 20, 2009

இப்போது நீங்கள் வந்திருக்கிறீர்கள்... பிரபாகரனை காணவில்லையே..?

பயணக் களைப்பு அகலாத நிலையில், நெஞ்சறையும் நிஜங்களை கொஞ்சமும் மறைக்காமல் குமுறலும் கொந்தளிப்புமாக நம்மிடம் கொட்டத் தொடங்கினார் திருமாவளவன்.

தமிழர்களுக்கு தனி நாடு உருவாக்கப் போராடிய கூட்டம் வேரோடு சாய்க்கப்பட்ட வேதனை எனக்குள் இன்றளவும் விம்மி வெடித்துக் கொண்டிருக்கிறது. அந்த பாரத்துடன், மிச்சமிருக்கும் உறவுகளையாவது பார்த்துவிடுகிற துடிப்பிலேயே விமானத்தில் அமர்ந்தேன். சக எம்.பிக்கள் முகங்களிலும் இறுக்கம்... சோகம். இலங்கையில் போய் கால் வைத்தபோதே, ஒரு விதமான நடுக்கம் என்னை ஆட்கொண்டது. முதலில் மரியாதை நிமித்தமான பணிகளை முடித்துவிட்டு, நம் சொந்தங்களைப் பார்க்கக் கிளம்பினோம். எங்களை வரவேற்கும் விதமாக சிங்களப் பெண்களும் ஆண்களும் நடமாடினார்கள். அவர்களின் வெற்றியைக் கொண்டாடுவது போல் ருத்ரதாண்டவமாக இருந்த அந்த நடனத்தைக் கண்டு எனக்கு பற்றிக் கொண்டு வந்தது. மாகாணங்கள், முகாம்கள் என சுற்றி வந்த ஐந்து நாள் பயணத்தில் மொத்தமாக நான் உடைந்துபோனதே நிஜம்.


தமிழகத்தில் எழுந்த பேரெழுச்சிகளை எல்லாம் தாண்டியும், இப்படியான கதிக்கு தமிழினம் ஆளாகிவிட்டதே என்கிற வேதனை சாகும் காலம் வரை என்னை சங்கடப்படுத்திக் கொண்டேதான் இருக்கும்...என்று குரல் உடைந்து கூறிய திருமாவிடம்...

முகாம்களில் அடைக்கப்பட்டிருக்கும் தமிழ் மக்களின் நிலை எப்படி இருக்கிறது?

மிகுந்த கவலைக்கிடமாகவே இருக்கிறது. 2,500 ஏக்கர் காட்டைச் சீரமைத்து நிலமாக்கி, அதில்தான் எட்டு முகாம்களை அமைத் திருக்கிறது சிங்கள அரசு. அதில் ஆறு முகாம்களில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் கொட்டடியில் பரிதாபமாக முடங்கிக் கிடந்தனர். முகாம்களுக்கு கதிர்காமர், அனந்தக்குமாரசாமி, அருணாசலம் என தமிழர்களின் பெயரையே வைத்திருப்பதை சிங்கள அதிகாரிகள் எங்களிடம் பெருமிதமாகச் சுட்டிக் காட்டினார்கள். நாங்கள் எந்தளவுக்கு தமிழ் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கிறோம் என்பதற்காகவே சொன்னது அது!

ஆனால், தலைவாழை இலைச் சோற்றில் அரளியை அரைத்து ரசம் ஊற்றிய கணக்காக, தமிழர்களின் பெயர்களை முகாம்களுக்கு பெருமையாகச் சூட்டிவிட்டு, உள்ளே உருத்தெரியாத அளவுக்கு தமிழ் மக்களைச் சிதைக்கிற வேலையையே சிங்கள அரசு செய்து கொண்டிருக்கிறது. முகாம்களில் தங்கி இருக்கும் நம் உறவுகளிடம் பேசியபோது, அனைவருமே கண்ணீருடன், பச்சத் தண்ணிகூட கிடைக்கலே... எங்க தொண்டையை நனைக்கவாவது வழி பண்ணிட்டு போங்க என்று கதறுகின்றனர். ஓர் ஆளுக்கு ஐந்து லிட்டர் வீதம் தண்ணீர் கொடுப்பதாக சிங்கள அரசு எங்களிடம் சுட்டிக் காட்டியது. ஆனால், ஒரு வாரத்துக்கும் மேலாக அந்த பாவப்பட்ட மக்களுக்கு தண்ணீரையே கண்ணில் காட்டவில்லையாம். சில சிறுவர்களிடம் பேசியபோது, குளோரின் கலந்த தண்ணீரைக் குடிக்கப் பிடிக்கலை என்றார்கள். படுக்கைக்கும் கழிப்பிடத்துக்கும் வழியில்லாத நிலையைச் சொல்லியழுத தாய்மார்கள், இப்படியெல்லாம் நாங்க அவமான வாழ்க்கை முன்பு வாழ்ந்ததே கிடையாது என வீறிட்டனர். மந்தைகளாக மனிதர்களை அடைத்து வைத்திருக்கும் கொடுமையை உலகத்தின் பெருந் துயரக்காரனாகப் பார்த்துவிட்டு வந்தேன்!

முகாமில் உள்ள இளைஞர்கள் சித்ரவதைக்கு ஆளாக்கப்படுவதாகவும், இளம் பெண்கள் பாலியல் கொடூரங்களுக்கு உள்ளாவதாகவும் சொல்லப் படுகிறதே... அது குறித்து விசாரித்தீர்களா?

முகாமில் உள்ளவர்கள் எங்களிடம் மனசுவிட்டுப் பேச அச்சப்பட்டு ஒதுங்கியே நின்றார்கள். முகாம்களில் நிலவும் நிஜமான நிலைகுறித்து விசாரிப்பதற்காக தனிப்பட்ட சிலரிடம் நான் பேச முற்பட்டபோது, இந்திய தூதரக அதிகாரிகளே அதனைத் தடுக்க மெனக் கெட்டார்கள். அதையும் தாண்டி சிலரிடம் பேசியபோது, முகாம்களில் இருந்தவர்களில் சந்தேகத்தின் பேரில் 11,000 பேர்களை பிரித்து ரகசிய முகாம்களுக்கு அழைத்துக் கொண்டு போய்விட்டார்கள். வவுனியாவில் உள்ள வாணி மகா வித்யாலயா, முஸ்லிம் மகா வித்யாலயா ஆகிய பாடசாலைகளிலும், கண்டி, கொழும்பு, ஓமந்தை மன்னார், திரிகோணமலை பகுதிகளில் உள்ள ரகசிய முகாம்களிலும் வைத்து அவர்களை விசாரணை என்கிற பெயரில் ராணுவம் படாத பாடுபடுத்திக் கொண்டிருக்கிறதாம். 11,000 பேரில் எத்தனை பேர் மிச்சமிருக்கிறார்கள் என்பது யாருக்குமே தெரியாது எனச் சொன்னார்கள்.

எங்களோடு சகஜமாக பேச முடியாத அந்தச் சூழலிலும், தயவுசெய்து எங்களை சொந்த மண்ணுக்கு அனுப்புங்கள். கையேந்திப் பிழைக்கும் வாழ்க்கை எங்களை கொஞ்சம் கொஞ்சமாகக் கொன்று கொண்டிருக்கிறது என பலரும் ஓலமிட்டு அழுதார்கள். ஒரு பெரியவர் என்னிடம் ஓடிவந்து, ஒரே ஒரு வேட்டியை ஒரு மாசத்துக்கும் மேலா உடுத்திக்கிட்டு இருக்கேன் என்றவர் கைவிரித்துக் கதறினார். பல தாய்மார்கள், எங்களோட பொடியன்களைக் காணோம். அவங்க எங்கே இருக்காங்களோ, எப்படி இருக்காங்களோ...என்று மாலை மாலையாகக் கண்ணீர் உகுத்துக் கொண்டிருந்தார்கள்.

முகாம்களுக்கு இடையே முள்வேலிக் கம்பி போடப் பட்டு இருப்பதால், தங்களின் சக ரத்த உறவுகளைக்கூட சந்திக்க முடியாமல், கம்பி வேலிக்கு அப்பாலிருந்து தவிக் கிற அவர்களின் கொடுமையைக் காட்டிலும் வேறேதும் பெரிய சித்ரவதை இருக்கிறதா?

குடிக்கவும் குளிக்கவும் வழியில்லாமல் தவிக்கும் நம் சொந்தங்கள், இன்னும் ஒரு மாதம் அந்த முகாமுக்குள்ளேயே நீடிக்கிற நிலை வந்தால், இன்னொரு சோமாலியா சோகம் அங்கே உருவாகிவிடும்! இப்போதே முகாம்களுக்குள் சரியான மருத்துவ வசதிகள் இல்லை. அதனால் மஞ்சள் காமாலை, தோல் நோய்கள் போன்றவை வருத்திக் கொண்டிருக்கின்றன. சீக்கிரமே வரப் போகும் மழைக்காலமும் தொற்று வியாதிகளைப் பெரிதாகப் பரப்பிவிடக் கூடிய அபாயமிருக்கிறது. இத்தகைய இக்கட்டான சூழலிலும் முகாமுக்குள்ளேயே பிள்ளையார் கோயில் ஒன்றைக் கட்டி, நீயாச்சும் எங்களைக் காப்பாத்து சாமி! என நம் உறவுகள் கதறுவதையும் பார்த்தேன்.

எம்.பிக்கள் குழுவுக்கு பல இடங்களிலும் எதிர்ப்பு கிளம்பியதாகச் சொல்லப்படுகிறதே?

அதனை எதிர்ப்பு என்பதைவிட, அடக்க முடியாத ஆதங்கம் என்று சொல்லலாம். யாழ் பல்கலைக்கழகத்துக்கு நாங்கள் சென்றிருந்தபோது, தமிழ் மக்கள் பெருந்திரளாகக் கூடி வரவேற்றார்கள். நான் அங்கே பேச முடியாத சூழல் உண்டானது. பல இளைஞர்கள் என்னிடம் ஓடிவந்து, நீங்கள் கட்டாயம் ஏதாவது பேசுவீர்கள் என எதிர்பார்த்தோம் எனச் சொன்னார்கள். சிலர், நாங்க என்ன பாவம் பண்ணினோம்? இந்தியாவும் கைகோத்து எங்களை அழிச்சிடுச்சே... கலைஞரய்யா எங்களை காப்பாத்துவார்னு நினைச்சோமே...என அபயக் குரல் எழுப்பினார்கள். எங்களின் நிலைமையை வெளிப்படையாகச் சொல்ல முடியாமல் இருக்கி றோம். நீங்கள்தான் கலைஞரய்யாவிடம் நிஜமான நிலைமையைச் சொல்லி அவரை உதவச் சொல்ல வேண்டும் என்றார்கள்.

சில இளைஞர்கள், இங்கே நீங்கள் போட்டியிட்டால் கணிசமான வாக்குகள் வித்தியாசத்தில் யாழ்ப்பாண எம்.பியாக ஜெயிப்பீர்கள். நாங்கள் உங்கள் மீது வைத்திருக்கும் நம்பிக்கை அப்படிப்பட்டது என்றார்கள். என்னை நானே நொந்துகொண்ட நேரமது. எப்படியும் தொப்புள்கொடி உறவு நம்மைக் காப்பாற்றும் என நம்பிக்கை பூண்டிருந்தவர்களுக்கு நம்மால் ஏதும் செய்ய முடியாமல் போய்விட்டதே என்கிற வருத்தத்தில் கண் கலங்கி விட்டேன். அந்த வருத்தத்திலேயே சக எம்.பிக்களுடன்கூட என்னால் இயல்பாகப் பேச முடியவில்லை.

சிங்கள அரசுடன் நெருக்கம் பாராட்டும் டக்ளஸ் தேவானந்தா, பிள்ளையான் போன்றோர்தான் உங்களை வழிநடத்திச் சென்றார்களாமே...?

சில மாகாணப் பகுதிகளுக்கு மட்டும் அவர்களோடு செல்ல வேண்டியிருந்தது. ஒரு மேடையில் என்னருகே அமர்ந்திருந்த கனிமொழி எழுந்ததும் அங்கே ஓடிவந்த டக்ளஸ் தேவானந்தா, என்னைப் பற்றி நீங்கள் தவறான அபிப்பிராயம் கொண்டிருக்கிறீர்கள். என்னதான் போராடினாலும், இறுதியில் இப்படியான துயரம்தான் நடக்கும் என்பது எங்களுக்குத் தெரிந்ததால்தான், நாங்கள் அரசோடு அனுசரித்து நடக்க ஆரம்பித்தோம். ஆனாலும், அரசுக்கு ஆதரவாக நாங்கள் யாரையும் காட்டிக் கொடுக்கவில்லை என்றார். நடந்தது நடந்துவிட்டது... மிச்சமிருக்கும் தமிழ்த் தலைவர்களாவது ஒற்றுமையாகக் கைகோத்து, தமிழ் மக்களின் வாழ்வுக்கு வழி செய்யலாமே என அவரிடம் கேட்டேன். அவர் மீதான கோபங்களுக்கு எல்லாம் விடை கேட்கிற நிலையில் அப்போது அங்கே நான் இல்லை.

நான்காம் நாள் இலங்கை அதிபர் ராஜபக்ஷேவை சந்தித்தீர்களே... அப்போது எப்படி இருந்தது உங்களின் மனநிலை?

அதிபர் ராஜபக்ஷேவை சந்திக்கும் முன்னரே, முகாம்களின் நிலை குறித்துப் பேசுவதற்காக பாதுகாப்புத் துறை ஆலோசகரான கோத்தபய ராஜ பக்ஷேவைச் சந்தித்தோம். எனக்கு பாதுகாப்பு பணி மட்டும்தான் தெரியும். முகாம் நிலை குறித்து அறிய நீங்கள் அதிபரின் அரசியல் ஆலோசகரான பசில் ராஜபக்ஷேயை பாருங்கள் எனச் சொன்னார். பசில் ராஜபக்ஷேயிடம் பேசியபோது, முகாம்களில் தற்போது 3,000க்கும் மேற்பட்ட கர்ப்பிணிகள் இருக்கிறார்கள். அவர்களில் பலரையும் சொந்த இடங்களுக்கு அனுப்ப முடிவெடுத் தோம். ஆனால், 268 கர்ப்பிணிகளைத்தான் அனுப்ப முடிந்தது என்றார். இதற்கெல்லாம் பிறகே அதிபருடனான சந்திப்புக்கு ஏற்பாடானது.

அனைத்து எம்.பிக்களையும் மரியாதையோடு வரவேற்ற ராஜபக்ஷே, என்னைச் சுட்டிக்காட்டி, நீங்கள் எனக்கு எதிராகத் தமிழகத்தில் கடுமையாக முழங்கி வருகிறீர்கள் எனச் சிரித்தார். உலகத்தையே ஜெயித்துவிட்டது போல இருந்தது அவருடைய அந்தச் சிரிப்பு. அமைதிக் காலத்தில் நான் ஒரு முறை ராஜபக்ஷேயை சந்தித்துப் பேசி இருக்கிறேன். அதை நினைவுகூர்ந்து பேசிய அதிபர், நீங்கள் என்னை சந்தித்தபோது, பிரபாகரனை நீங்கள் அழைத்து வந்தால், மீடியாக்களுக்குத் தெரியாமல் நமக்குள்ளேயே சமரசம் பேசி தக்க தீர்வுக்கு வழி வகுக்கலாம் என நான் சொன்னேனே, நினைவிருக்கிறதா? இப்போது நீங்கள் வந்திருக்கிறீர்கள்... பிரபாகரனை காணவில்லையே..? அவரை உங்களுடன் அழைத்து வரவில்லையா? எனக் கேட்டு மீண்டும் சிரித்தார்.

சபைக்கு நடுவே சாட்டையடிபட்ட வேதனையில் துடித்துப் போனேன். சூழல் என்னை அமைதி காக்கச் செய்தது. கனிமொழி, டி.ஆர்.பாலுவிடம் என்னை சுட்டிக்காட்டி பேசிய ராஜபக்ஷே, இவர் பிரபாகரனின் மிக நெருங்கிய கூட்டாளி. இக்கட்டான நேரங்களில் பிரபாகரனின் பக்கத்தில் நின்றவர். நல்லவேளை... கடைசி நேர இக்கட்டில் இவர் பிரபாகரனுடன் இல்லை. அப்படி இருந்திருந்தால் இந்நேரம்...என்று வார்த்தையை முடிக்காமல் நிறுத்தினார். ஆணவமும் அகம்பாவமும் மதியை மறைக்க, சிறு எறும்புக்கும் தீங்கு விளைவிக்காத பாவனையில் அவர் பேசிக் கொண்டிருந்தார். அவருடைய நக்கலான பேச்சு என்னை மட்டுமல்லாது, இதர எம்.பிக்களையும் முகம் சுளிக்கவே வைத்தது. அப்போதும், நீங்கள் ஒரு பௌத்தர். உங்களிடமிருந்து கருணையையும் இரக்கத்தையும்தான் எம்மக்கள் எதிர்பார்க்கிறார்கள் என ராஜபக்ஷேயிடம் சொன்னேன். ரெண்டு வருடங்களுக்கு முன்பு அனைத்துக் கட்சி நிர்ணயக் குழு அமைச்சர் திசவிதாரன தலைமையில் தயாரித்த அறிக்கையின்படி, தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வு வழங்கலாமே என நான் சொன்னபோது, முகத்தில் அடித்தாற் போல, அது என்னோட பார்ட்... நான் பார்த்துக்கிறேன் எனச் சொல்லிச் சிரித் தார் ராஜபக்ஷே. அதற்கு மேலும் என்னால் அங்கே நிற்க முடியவில்லை.

பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் என அடித்துச் சொல்பவர் நீங்கள். இலங்கைக்குப் போய் வந்த பிறகும் அந்தக் கருத்தில் உறுதியாக இருக்கிறீர்களா?

கொழும்பில் உள்ள சில முக்கியஸ்தர்களிடத்தில் தலைவர் பிரபாகரனின் நிலை பற்றி விசாரித்தேன். அவர்கள் ஏதும் பேசுகிற நிலையில் இல்லை. ஒரு விதமான பயமும் பாரமும் அவர்களைப் படபடப்போடு தவிக்க வைத்திருந்தது. அதனால் தலைவர் பிரபாகரன் பற்றிய விவரங்களை என்னால் சரியாக அறிய முடிய வில்லை. ஆனால், பசில் ராஜபக்ஷேயுடன் பேசிக் கொண்டிருந்தபோது, பொட்டு அம்மானின் உடல் மட்டும் கிடைக்கவில்லை என அவர் சொன்னார்.

பிரபாகரன் பெற்றோரின் நிலை குறித்து ஏதாவது தெரிந்ததா?

அதிபரின் அரசியல் ஆலோசகரான பசில் ராஜபக் ஷேயிடம் பிரபாகரன் பெற்றோரின் நிலை குறித்து நான் விசாரித்தேன். அவர்கள் பத்திரமாக இருக்கிறார்கள். உணவு, மருந்து என அவர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்பட்டு வருகின்றன எனச் சொன்னார் பசில். பிரபாகரனின் பெற்றோரையும், பிரபாகரனின் மாமியாரையும் தயவு செய்து விடுதலை செய்யுங்கள் என நான் வேண்டியபோது, அவர்களின் உறவு வழியிலானவர்கள் விருப்பப்பட்டால், தாராளமாக அழைத்துச் செல்லலாம். ஆனால், அவர் களை இந்தியாவுக்கு அனுப்ப மட்டுமே நாங்கள் அனுமதிப்போம் எனச் சொன்னார் பசில். எப்படியாவது அவர்களை விரைவிலேயே அங்கிருந்து மீட்க அனைத்து முயற்சிகளையும் நான் தொடர்ந்து எடுப்பேன்.

எம்.பிக்கள் குழுவின் அறிக்கை இலங்கைத் தமிழர்களின் நிஜமான நிலையை இருட்டடிப்பு செய்வதாக இருக்கும் என எதிர்க்கட்சியினர் அடித்துச் சொல்கிறார்களே?

அப்படி இருக்காது என நம்புவோம். ஜூ.வி.யிடத்தில் நான் சொல்லி இருக்கும் இலங்கைத் தமிழர்களின் அத்தனை விதமான துன்பங்களையும் எங்கள் கட்சி மக்கள் மத்தியில் எதற்கும் தயங்காமல் எடுத்துவைக்கும்!

ஜூனியர் விகடன்

0 விமர்சனங்கள்:

BBC தமிழோசை

மீனகம்

தமிழ் அரங்கம்

அலைகள்

Nankooram

நெருடல்

About This Blog

Velupillai Prabhakaran

The rest of the world might never understand the violence Velupillai Prabhakaran stood for, but its imprint on Sri Lanka is wide and deep. For 26 years, the elusive leader of the Liberation Tigers of Tamil Eelam (LTTE) had waged war with the government to win an independent homeland, or eelam, for the island's Tamil minority. The struggle claimed more than 70,000 lives--including, on May 18, Prabhakaran's. The government says he was killed, along with 17 of his trusted lieutenants, while fleeing an army ambush.

Prabhakaran, 54, was born to a middle-class family on the Jaffna Peninsula. Incensed by discrimination against Tamils and radicalized by a militant grade-school teacher, Prabhakaran founded the LTTE in 1976, a year after a group he headed claimed responsibility for killing Jaffna's mayor. By 1983 the guerrilla movement--which pioneered suicide bombings and the recruitment of child soldiers--escalated the fighting into a civil war.

At the height of his power earlier this decade, Prabhakaran led a de facto government that controlled vast swaths of territory and boasted its own systems of taxes, roads and courts. As the army closed in, he allegedly used thousands of Tamil civilians as human shields. By the final days, just 250 LTTE members remained. They died too, along with the dream of eelam.

Blog Archive

சினிமா தகவல்கள்

வீரகேசரி இணையதள செய்தி தலைப்புகள்

Puthinam

அதிர்வு இணையதள செய்தி தலைப்புகள்

குளோபல் தமிழ் இணையதள செய்தி தலைப்புகள்

சங்கதி இணையதள செய்தி தலைப்புகள்

கூகிள் இணையதள செய்தி தலைப்புகள்

Thatstamil - தற்ஸ்தமிழ்

தமிழ்செய்தி இணையம்

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ Scroll to Top