இன்று:
 
தேர்தல் முடிவுகள் 2010 Presidential Election Results - 2010

Sunday, December 20, 2009

சிவாஜிலிங்கம் உட்படத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பின்பற்றிய ஆயுதப் போராட்டப் பாதை தோல்வியில் முடிந்தது மாத்திரமன்றி அழிவுகரமானது என்பதும் நிரூபிக்கப்பட்டுள்ளது.

கடந்தகாலப் பிடிவாதத்தை தலைவர்கள் கைவிட்டால் தமிழினம் தலைநிமிரும்

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் வேட்பாளர் ஒருவரை நிறுத்துவதில்லை என்றும் இரண்டு பிரதான வேட்பாளர்களுடனும் பேசுவது என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எடுத்த தீர்மானத்துக்கு முரணாகக் கூட்டமைப்புப் பாராளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் வேட்புமனு தாக்கல் செய்திருக்கின்றார். அவருக்கு எதிராகக் கூட்டமைப்பு என்ன நடவடிக்கை எடுக்கப் போகின்றது என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.


எவ்வாறாயினும், சிவாஜிலிங்கம் இத் தேர்தலில் போட்டியிடுவதன் மூலம் என்ன விளைவை எதிர்பார்க்கின்றார் என்பது விளங்கவில்லை. ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் வேட்பாளரொருவர் வெற்றி பெறுவது சாத்தியமில்லை. இந்த நிலையில் தமிழ் வேட்பாளர் ஒருவர் போட்டியிடுகின்றார் என்றால் அது ஏதாவதொரு கொள்கைக்கு அல்லது போராட்டப் பாதைக்குத் தமிழ் மக்களின் அங்கீகாரத்தைப் பெறுவதற்காகவே இருக்க வேண்டும். சிவாஜிலிங்கம் எந்தக் கொள்கையையும் முன்வைக்கவில்லை. எந்தப் போராட்டப் பாதையையும் அறிவிக்கவில்லை.

சிவாஜிலிங்கம் உட்படத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பின்பற்றிய ஆயுதப் போராட்டப் பாதை தோல்வியில் முடிந்தது மாத்திரமன்றி அழிவுகரமானது என்பதும் நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்தப் போராட்டப் பாதையைப்போலவே இவர்கள் பின்பற்றிய தனிநாட்டுக் கொள்கையும் அழிவுகரமானது என்பதும் நடைமுறைச் சாத்தியமற்றது என்பதும் நிரூபணமாகியுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இப்போது புதிய கொள்கையைப் பின்பற்ற வேண்டும். அதை அடைவதற்குப் புதிய அணுகுமுறையைத் தெரிவுசெய்ய வேண்டும்.

இனப் பிரச்சினையின் தீர்வுக்காகக் கொள்கைத் திட்டமொன்றைத் தயாரித்துக் கொண்டிருப்பதாகவும் விரைவில் வெளியிடப் போவதாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைவர்கள் கூறிப் பல மாதங்கள் கழிந்துவிட்டன. இன்னும் அந்தக் கொள்கைத் திட்டம் வெளிவரவில்லை.

நிரந்தரமான கொள்கை இல்லாமையும் இனப்பிரச்சினை தீர்க்கப்படாமலிருப்பதற்கு ஒரு காரணம். முதலில் சமஷ்டி. பின்னர் தனிநாடு. அதற்குப் பின் அதிகாரப் பகிர்வு. இறுதியாக மீண்டும் தனிநாடு. இப்போது கொள்கைத் திட்டமொன்று தயாரிப்பு நிலையில்.

சிவாஜிலிங்கம் எந்தக் கொள்கைக்கு மக்களிடம் அங்கீகாரம் கோரப்போகின்றார்? மக்களின் அங்கீகாரத்துக்காக எந்த அணுகுமுறையை முன்வைக்கப் போகின்றார்? கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்னவுடன் சேர்ந்து பிரசாரம் செய்யப் போவதாக சிவாஜிலிங்கம் கூறுவதால் விக்கிரமபாகுவின் கொள்கையையும் அணுகுமுறையையுமே மக்களின் அங்கீகாரத்துக்காக இவர் முன்வைக்கப் போகின்றாரா என்ற கேள்வி எழுகின்றது.

தமிழ் மக்களுக்குச் சுயநிர்ணய உரிமை வேண்டும் என்றும் அந்த உரிமையைப் பிரிந்து செல்வதற்குப் பயன்படுத்துவதா அல்லது பிரதேச சுயாட்சிக்குப் பயனப்டுத்துவதா என்பதைத் தமிழ் மக்களே தீர்மானிக்க வேண்டும் என்றும் விக்கிரமபாகு கருணாரட்ன கூறுவது மார்க்சிய சித்தாந்த நிலைப்பாடு. ஒவ்வொரு நாட்டினதும் சமகால யதார்த்தத்துக்கு ஏற்றவாறு இச் சித்தாந்தத்தை நடைமுறைப்படுத்துவதற்கான அணுகுமுறையைத் தேர்ந்தெடுக்கும் கடப்பாடும் அது பற்றி மக்களுக்குத் தெளிவுபடுத்தும் கடப்பாடும் மார்க்சியவாதிகளுக்கு உண்டு.

இந்த வகையில், இலங்கையில் சுயநிர்ணய உரிமையை எவ்வாறு பிரயோகிக்க வேண்டும் என்று தமிழ் மக்களுக்கு அறிவுரை வழங்க வேண்டிய கடப்பாடு எல்லா மார்க்சிஸ்டுகளுக்கும் உண்டு. விக்கிரமபாகுவுக்கும் உண்டு. ஆனால் விக்கிரமபாகு அந்த அறிவுரையை வழங்கத் தயாரில்லை. ஒரு மார்க்சிஸ்ட் என்ற வகையிலும் அரசியல் கட்சியொன்றின் தலைவர் என்ற வகையிலும் அக் கடப்பாட்டை நிறைவேற்ற விக்கிரமபாகு தயங்குகின்றார்.

பிரிவினைக்கு ஆதரவானவர்களையும் ஐக்கிய இலங்கையில் அரசியல் தீர்வுக்கு ஆதரவானவர்களையும் ஒரே நேரத்தில் திருப்திப்படுத்துவதற்கான இந்த நிலைப்பாடு இரு சாராரையும் ஒரே நேரத்தில் ஏமாற்றுவதாகவே முடியும்.

இந்த வெகுஜன விருப்புவாத அரசியலைத் தான் சிவாஜிலிங்கமும் பின்பற்றுகின்றாரா?

தமிழ் மக்களுக்கு விமோசனம் பெற்றுக் கொடுப்பதற்காகவே தேர்தலில் போட்டியிடுவதாக சிவாஜிலிங்கம் கூறுகின்றார். அவர் சோடி சேர்ந்திருக்கும் விக்கிரமபாகுவும் தமிழ் மக்களின் விமோசனம் பற்றி அடிக்கடி பேசுபவர்.

தமிழ் மக்களின் விமோசனம் பற்றிப் பேசுபவர்கள் அம் மக்களின் இன்றைய நிலையையும் அதற்கான காரணத்தையும் பற்றி நிதானமாகச் சிந்திக்க வேண்டும்.

நாட்டின் சனத்தொகையில் இலங்கைத் தமிழரின் விகிதாசாரம் கடந்த இரண்டு தசாப்த காலத்தில் வெகுவாக வீழ்ச்சியடைந்திருக்கின்றது. பாரம்பரிய வாழ்விடங்களிலிருந்து பெருந்தொகையானோர் வெளியேறித் தற்காலிகமாக வேறு இடங்களில் வாழ்கின்றார்கள். இவர்கள் தங்கள் வழமையான தொழில்களை இழந்ததால் நிரந்தர வருமானம் அற்றவர்களாக உள்ளனர். தமிழ் மக்கள் முகங்கொடுத்த இழப்புகளும் அழிவுகளும் சொல்லில் அடங்காதவை.

இவற்றுக்கான பொறுப்பை மற்றவர்களின் தலையில் போடமுடியாது. தமிழ் மக்களுக்கு அரசியல் தலைமை வகித்தவர்களே இவற்றுக்குப் பொறுப்பேற்க வேண்டும். தமிழ் மக்களின் இன விகிதாசாரம் வீழ்ச்சியடைவதைத் தவிர்ப்பதற்கும் தமிழ் மக்கள் பாரம்பரிய இடங்களிலிருந்து வெளியேறுவதைத் தவிர்ப்பதற்கும் இவர்களால் முடியாமற் போனதற்கான காரணம் இவர்களின் தவறான கொள்கையும் தவறான அணுகுமுறையுமே....

தனிநாட்டைப் பெற்றுத் தருவோம் என்றும் பூரணமான சுயாட்சியைப் பெற்றுத் தருவோம் என்றும் கூறும்போது அப்பாவி மக்கள் அதை நம்பி ஆதரவளிப்பதொன்றும் புதுமையானதல்ல. காலத்துக்குக் காலம் ஒவ்வொரு தீர்வும் முன்வைக்கப்பட்ட போது தமிழ்த் தலைவர்கள் இப்படியான கோஷங்களை முன்வைத்து மக்களை ஏமாற்றினார்கள். இதன் விளைவு என்ன? தலைவர்கள் தங்கள் பாராளுமன்றப் பதவிகளைப் பாதுகாத்துக் கொண்டார்கள். மக்கள் இழப்புகளுக்கும் அழிவுகளுக்கும் உட்பட்டார்கள்.

முழுமையான தீர்வைத் தவிர வேறெதுவும் வேண்டாம் என்று கூறுவதைக் கேட்க நன்றாக இருக்கும். ஆனால் நடைமுறைக்குப் பொருந்தாது. நன்மையும் தராது. தமிழ்த் தலைவர்கள் இவ்விடயத்தில் பாரதூரமான தவறு விட்டிருக்கின்றார்கள். அதிகாரம் போதாது என்று வடக்கு, கிழக்கு மாகாண சபையைக் கைவிட்டார்கள். அதேபோல அதிகாரம் போதாது என்று பொதுசன ஐக்கிய முன்னணியின் அதிகாரப் பகிர்வுத் தீர்வுத் திட்டத்தை எதிர்த்தார்கள். -s>r தீர்வுகளை எதிர்க்காமல் இருந்திருந்தால் எவ்வளவோ இழப்புகளையும் அழிவுகளையும் தவிர்க்க முடிந்திருக்கும்.

உதாரணமாக அதிகாரப் பகிர்வுத் தீர்வுத் திட்டத்தை எடுத்துப் பார்ப்போம். அத்தீர்வு நடைமுறைக்கு வந்திருந்தால் வடக்கு, கிழக்கு மாகாணங்களின் இணைப்பு தொடர்ந்திருக்கும். தமிழ் மக்களின் விகிதாசாரம் வீழ்ச்சியடைவது நின்றிருக்கும். உயிரிழப்புகளையும் உடைமைகளின் அழிவுகளையும் தவிர்த்திருக்கலாம். வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வாழும் தமிழ் பேசும் மக்களுக்குத் தங்களைத் தாங்களே நிர்வகிக்கும் அதிகாரம் கிடைத்திருக்கும்.

இந்த அரிய சந்தர்ப்பத்தைத் தமிழ்த் தலைவர்கள் நிராகரித்தது மிகப் பெரிய பின்னடைவுக்கே வழிகோலியது. இது ஒரு வரலாற்றுத் தவறு. இதைப் பற்றியே பேசிக்கொண்டிருப்பதில் பயனில்லை. அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதே முக்கியமானது.

தமிழ் மக்களின் விகிதாசாரம் வீழ்ச்சியடைந்து செல்வதை உடனடியாக நிறுத்த வேண்டியதும் இடம்பெயர்ந்த மக்கள் அனைவரும் தங்கள் சொந்த இடங்களில் குடியேறி வழமையான தொழிலைப் புரியும் நிலையை ஏற்படுத்த வேண்டியதும் தலைவர்களின் தலையாய பொறுப்பு. புத்தகங்களிலிருந்து மார்க்சிய சித்தாந்தங்களை யதார்த்தத்துக்குப் புறம்பாக எடுத்துக் கூறுவதன் மூலமும் முழுமையான அரசியல் தீர்வைத் தவிர வேறெதையும் ஏற்க மாட்டோம் என்று பிடிவாதம் பிடிப்பதன் மூலமும் இதைச் செய்ய முடியாது. இந்தப் பிடிவாதம் தான் தமிழ் மக்களின் இவ்வளவு துன்பங்களுக்கும் காரணமாகியது. தீர்வொன்றை உடனடியாக நடைமுறைக்குக் கொண்டு வருவதன் மூலமே இதைச் செய்ய முடியும்.

ஒற்றையாட்சியின் கீழ் இனப்பிரச்சினைக்கு முழுமையான தீர்வு சாத்தியமில்லை. ஆனால் இப்போது ஒற்றையாட்சி நிலைபெற்ற ஒன்றாகிவிட்டது. ஒற்றையாட்சியைக் கைவிடுவதற்குப் பிரதான அரசியல் கட்சிகள் இப்போது தயாராக இல்லை. தயாராக இருந்த வேளையில் எங்கள் தலைவர்கள் அந்தச் சந்தர்ப்பத்தைச் சரியாகப் பயன்படுத்தவில்லை. ஒன்றையாட்சியின் கீழ் வரும் தீர்வை ஏற்க மாட்டோம் என்று கூறுவோமேயானால், தமிழ் மக்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் தொடர்வதைப் பார்த்துக்கொண்டிருப்பவர்கள் ஆகிவிடுவோம்.

தமிழ் மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகளைத் தவிர்க்க வேண்டும். அதேநேரம் இனப் பிரச்சினைக்கான தீர்வு முயற்சி முன்னெடுக்கப் படுவதையும் உறுதிப்படுத்த வேண்டும். இதுதான் இன்று தமிழ்த் தலைவர்களுக்கு முன்னாலுள்ள பொறுப்பு.

இப்போது சாத்தியமானதாக இருப்பது பதின்மூன்றாவது திருத்தம். அதனிலும் பார்க்கக் கூடுதலான அதிகாரங்களுடைய தீர்வு பற்றி ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் இரண்டு பிரதான வேட்பாளர்களும் பேசுகின்றார்கள். அப்படியான ஒரு தீர்வை நடைமுறைக்குக் கொண்டுவரும் வகையில் தமிழ் மக்களுக்குத் தலைவர்கள் வழிகாட்ட வேண்டும்.

ஒற்றையாட்சியா இல்லையா என்பதிலும் பார்க்கத் தமிழ் மக்களுக்குப் பாதிப்பு ஏற்படுவதைத் தவிர்க்கும் வகையில் அதிகாரங்களைப் பெறுவதே இன்றைய நிலையில் முக்கியமானது. இந்தியாவில் நடைமுறையில் இருப்பது சமஷ்டித்தன்மை கொண்ட ஒற்றையாட்சி என்று சிலர் கூறுகின்றனர். ஒற்றையாட்சித் தன்மை கொண்ட சமஷ்டி என்று வேறு சிலர் கூறுகின்றனர். அதிகாரங்களே முக்கியமானவை என்பதற்கு இது ஒரு உதாரணம். படிப்படியாகக் கூடுதலான அதிகாரங்களைப் பெறும் போது ஒற்றையாட்சித் தன்மை தானாக மறைந்துவிடும்.

இரண்டு பிரதான வேட்பாளர்களுடனும் பேசுவது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எடுத்திருக்கும் முடிவு வரவேற்கத்தக்கது. இருவரும் அளிக்கும் வாக்குறுதிகளை அப்படியே ஏற்க வேண்டியதில்லை. அவ் வாக்குறுதிகளின் நம்பகத்தன்மை பற்றியும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இன்றைய ஜனாதிபதி ஏற்கனவே கிழக்கு மாகாணத்தில் பதின்மூன்றாவது திருத்தத்தை நடைமுறைக்குக் கொண்டுவந்திருக்கின்றார். இத் திருத்தத்திலும் பார்க்கக் கூடுதலான அதிகாரங்களுடைய ஆலோசனைகளைச் சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழு கையளித்திருக்கின்றது. இவற்றைக் கவனத்தில் எடுத்து நல்ல முடிவுக்குக் கூட்டமைப்பு வரவேண்டும்.

thinakaran

0 விமர்சனங்கள்:

BBC தமிழோசை

மீனகம்

தமிழ் அரங்கம்

அலைகள்

Nankooram

நெருடல்

About This Blog

Velupillai Prabhakaran

The rest of the world might never understand the violence Velupillai Prabhakaran stood for, but its imprint on Sri Lanka is wide and deep. For 26 years, the elusive leader of the Liberation Tigers of Tamil Eelam (LTTE) had waged war with the government to win an independent homeland, or eelam, for the island's Tamil minority. The struggle claimed more than 70,000 lives--including, on May 18, Prabhakaran's. The government says he was killed, along with 17 of his trusted lieutenants, while fleeing an army ambush.

Prabhakaran, 54, was born to a middle-class family on the Jaffna Peninsula. Incensed by discrimination against Tamils and radicalized by a militant grade-school teacher, Prabhakaran founded the LTTE in 1976, a year after a group he headed claimed responsibility for killing Jaffna's mayor. By 1983 the guerrilla movement--which pioneered suicide bombings and the recruitment of child soldiers--escalated the fighting into a civil war.

At the height of his power earlier this decade, Prabhakaran led a de facto government that controlled vast swaths of territory and boasted its own systems of taxes, roads and courts. As the army closed in, he allegedly used thousands of Tamil civilians as human shields. By the final days, just 250 LTTE members remained. They died too, along with the dream of eelam.

Blog Archive

சினிமா தகவல்கள்

வீரகேசரி இணையதள செய்தி தலைப்புகள்

Puthinam

அதிர்வு இணையதள செய்தி தலைப்புகள்

குளோபல் தமிழ் இணையதள செய்தி தலைப்புகள்

சங்கதி இணையதள செய்தி தலைப்புகள்

கூகிள் இணையதள செய்தி தலைப்புகள்

Thatstamil - தற்ஸ்தமிழ்

தமிழ்செய்தி இணையம்

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ Scroll to Top