புலிகள் தமது கட்டுப்பாட்டுப் பிரதேசங்களில் ஒரு பாடசாலையோ ஒரு வாசகசாலையையோ ஒரு மருத்துவ மனையையோ மக்களுக்காக கட்டியதாக வரலாறு உண்டா?
கோட்டை பிடிப்பதாய்…! ‘வட்டுக்கோட்டை தீர்மானம்’ ஐ முன்மொழிந்தவர்களே!
கனடா வாழ் புலம்பெயர் தமிழ் மக்களுக்கு!
வணக்கம்
கடந்த மூன்று சகாப்தங்களாக வடக்கு கிழக்கு மக்கள் தமது அரசியல் உரிமைகளுக்கான போராட்டங்களை ஒரு பிற்போக்கு தலைமையிடம் முன்னரும், எதேச்சார சக்தியிடம் பின்னரும் கையளித்து ஆதரவளித்ததன் விளைவாக ஏற்பட்ட அழிவும், உயிர் இழப்புக்குகளும், சமூக சீர் குலைவுகளும் வரலாறு காணாதவை என்பதை எம் தமிழ் மக்கள் அறிவர்
தமிழ் மக்களுக்கான நியாயமான அபிலாசைகளை நமது சொந்த அரசியல் இலாபத்திற்காய், நலனுக்காய் பயன்படுத்தி எனது மக்களை பிழையான வழியில் நடத்தி வட்டுக்கோட்டை தீர்மானத்தின் மூலமாய், ஒட்டு மொத்த தமிழ் இனத்தையும் குறிப்பாக இளைய சமுதாயத்தினரை காவு கொடுத்த மகத்தான பெருமை தமிழர் விடுதலைக் கூட்டணி தலைமையையே சாரும். இத்தீர்மானத்தின் விளைவாக விடுதலைக்காய் வீரனாய் வெளிக்கிட்ட புலிகள் இந்த வட்டுக்கோட்டை தீர்மானத்தை முன்மொழிந்தவர்களையே அழித்தொழித்தது மிகவும் விந்தனையானது என்றால், இன்ற அதே தீர்மானத்தையே கையில் எடுத்து ஓர் குழப்ப ஆயுதமாக பாவிக்க முன்வந்திருப்பது விந்தையிலும் விந்தையானது.
தமது அரசியல் சுய இலாபத்திற்காய் தமிழ் மக்களை பகடைக்காய்களாகய் பயன்படுத்திய பிற்போக்கு தமிழர் விடுதலைக் கூட்டணியும் சரி, தமிழர் நியாயமான அரசியல் போராட்டத்தை பயங்கரவாதப் போராட்டமாக மாற்றி எம் இனத்தையும் வடக்கு கிழக்கை அழித்த எதேச்சாகார புலிகளும் சரி இது வரையில் ஒரு அரசியல் வெற்றியையோ வடக்கு கிழக்குக்கு சுபீட்சத்தையோ பெற்றுத்தந்திருக்கின்றார்களா? மக்களே சிந்திப்பீர்……
மாறாக பிற்போக்கு கூட்டணித் தலைமை, தாங்கள் வளர்த்த கடா தங்களை மார்பில் மோதியதைக் கண்டு எதிர்க்க திராணி இல்லாமல் எதேச்சாகார புலிகளுக்கு சேவகம் செய்ய நேர்ந்தது. இறுதிக் கட்ட போர்க் காலகட்டத்தில் புலித்தலமையை மட்டுமே காப்பாற்ற அணிதிரண்ட கூட்டணி பிற்போக்குவாதிகள் கூட்டம் எம் மக்களைக் காப்பாற்ற எவ்வித முயற்சியும் செய்யவில்லை. இலங்கை அரசை புலிகளுடன் போர் நிறுத்தம் செய்யக்கோரிய இவர்கள் தமிழ் மக்களை மனிதக் கேடயங்களாக பயன்படுத்திய புலிகளிடம் மக்களை விடுவிக்க கோரி எவ்வித கோரிக்கைகளையும் முன்வைக்கவில்லை. மாறாக சர்வதேசம் முழுவதும் சென்று புலித் தலமையைக் காப்பாற்றுவதில் முழுமுனைபப்பாக வேலை செய்து கொண்டிருந்தது. அப்பாவித் தமிழ் மக்களோ ஆதரவற்ற நிலையில் போர் முனையில் தப்பிக்க முயல புலிகளால் பாரபட்சமின்றி படுகொலை செய்யப்பட்டும், சுடப்பட்டும் காயமுற்றும் அல்லலுற்றனர்.
1987 இலங்கை - இந்திய ஒப்பந்தத்தின் விளைவாக ஏற்பட்ட இணைந்த வடக்கு - கிழக்கு மாகாண அரசை ஏற்றுக் கொள்ளாமல் அதனை எதிர்த்து ஆயுதம் ஏந்திய புலிகள் பின்னர் இந்திய இராணுவம் வெளியேற வடக்கு - கிழக்கு மாகாண அரசும் முடிவுக்கு வர எறத்தாழ 18 வருடங்கள் வன்னியில் ஒரு எதேச்சாகர அரசை நிறுவி மே 2009 தோற்றகடிக்கப்படும் வரை நடத்தி வந்திருக்கின்றார்கள். இந்தக் காலகட்டங்களில் தமிழ் மக்களின் சமூக பொருளாதார மேம்பாட்டிற்கு எடுத்த நடவடிக்கைகள் என்ன? புலிகள் தமது கட்டுப்பாட்டுப் பிரதேசங்களில் ஒரு பாடசாலையோ ஒரு வாசகசாலையையோ ஒரு மருத்துவ மனையையோ மக்களுக்காக கட்டியதாக வரலாறு உண்டா?
மாறாக சர்வ தேசமெங்கும் புலம்பெயர் தமிழ் மக்களிடம் வசூலிகப்பட்ட கோடான கோடி பணத்தை இராணுவத் தளபாடங்களுக்கும், பிரசாரத்திற்கும், வெளிநாட்டுப் புலிப் பினாமிகளின் உல்லாச வாழ்க்கைக்கும் மட்டுமே அவை பயன்படுத்தப்பட்டனவே தவிர சராசரி தமிழ் மக்களின் சமூக பொருளாதார வளர்ச்சிக்கோ எம் இளம் சமுதாயத்தின் கல்விக்கோ எதிர்கால நலன்களுக்கோ பயன்படுதப்படவில்லை. இத்தகைய பிற்போக்கு கூட்டணித் தலமையோ அல்லது எதேச்சாகார புலிகளையோ ஆதரித்ததன் விளைவுகளை இன்று நாம் அனுபவித்து வருபவை வரலாறாகிவிட்ட நிலமையில் மீண்டும் தமிழ் மக்களையும், அவர் தம் பிரதேசத்தையும் அழித்தொழிக் காரணமான அதே வட்டுக் கோட்டைத் தீர்மானத்தை புலம் பெயர் புலிப்பினாமிகள் கையிலெடுத்துக் கொண்டு புதுவித போருக்க போர்கோலம் பூண்டு நிற்கின்றார்கள்.
இதனால் வரக்கூடிய விளைவுகள் என்னவென்பதை பற்றியோ நாட்டில் ஏற்கனவே புலிகளால் அனாதைகள் ஆக்கப்பட்டு முள்ளக்கம்பிக்கு பின்னால் சிறைப்பட்டிருக்கும் மூன்ற இலட்சம் வடபுல தமிழ் மக்களை பற்றியோ, புலிகளின் மாற்றான் தாய் மனப்பாங்கின் விளைவால் அநியாயமாக அகதிகளாக்கப்பட்டு வாழ்கையை தொலைத்து விட்ட கிழக்கிலங்கை தமிழ் மக்களைப்பற்றியோ, புலிப்பாசிசத்தால் பாதிக்கப்பட்ட பல இலட்சம் தமிழ் பேசும் முஸ்லீம் சகோதரர்களை பற்றியோ எவ்வித அக்கறையும் இன்றியும் புலம் பெயர் புலிக்கூட்டம் அரசியல் போருக்கு அணிவகுத்து நிற்கின்றது.
தமிழ் மக்களின் நியாயமான அரசியல் உரிமைகளும், அபிலாஷைகளும் இன்னமும் நிறைவேற்றப்படாத நிலையில், பல்நூறு தமிழ் அரசியல் கைதிகள் இன்றும் இலங்கை அரசின் கட்டுப்பாட்டின் கீழும், பல்வேறு காரணங்களுக்காக பல ஆயிரம் தமிழ் மக்கள் இன்னமும் அரசின் நேரடிக்கட்டுப்பாட்டின் கீழ் உள்ள நிலையங்களிலும், தமிழ் இளைஞர்கள் பலர் விசாரணைக்காகவும், விடியலுக்காகவும் காத்திருக்கும் இந்நிலையில் புலிப்பினாமிகளின் இப்புதுப் போர் முயற்சி பாரிய பின் விளைவுகளை மட்டுமல்ல ஒட்டுமொத்த தமிழ் இனத்தையும் அழிக்கும் முயற்சியேயாகும். வெளிநாட்டில் உல்லாசமாக வாழும் புலிப்பினாமி கூட்டமும் அதன் ஆதரவுக் கூட்டமும் சற்றே சிந்திப்பீர்.
கடந்த மூன்று சகாத்தங்களாக பிழையாக வழி நடத்தப்பட்டும் அல்லது பயமுறுத்தி நிர்பந்திக்கப்பட்டும் வந்துள்ள எம் தமிழ் மக்களை நாம் கேட்டுக் கொள்வதெல்லாம் வெளிநாட்டில் உல்லாசமாக வாழ்ந்து கொண்டு தம் பிள்ளைகளை ஒழுங்காக படிப்பீத்துக்கொண்டு, பணங்களை உழைத்து பவிசாக வாழ பழகிப்போன நீங்கள் ஒருவரும் நாடு திரும்பப் போவதில்லை. உங்களது பிள்ளைகளும் உல்லாச பயணமாக மட்டும் வடக்கு கிழக்கிற்கு செல்வார்கள். எனவே தயவு செய்து இலங்கையில் வாழும் எம்மின மக்களை அமைதியாக வாழவிடுங்கள். தமது எதிர்காலத்தை தீர்மானிக்கும் உரிமையை அவர்களிடமே விட்டுவிடுங்கள்.
நீங்கள் புலம் பெயர் நாட்டில் உழைத்த பணத்தை வாரிவாரி புலிகளுக்கு இறைத்து வடக்கு கிழக்கை சுடுகாட்டாக்கியது போதும். எம்மக்களை அழித்தது போதும். இறுதியாக எஞ்சியிருக்கும் தமிழ் மக்களையாவது வாழ விடுங்கள். அவர்கள் தங்களுக்கென்றும், தம் சந்தததிக்கென்றும் வாழவிடுங்கள்.
போதும் நிறுத்துங்கள்!
மிஞ்சியிருக்கும் தமிழ் மக்களை வாழவிடுங்கள். கோட்டை பிடிப்பதாய் சொல்லிக் கொண்டு ‘வட்டுக்கோட்டை தீர்மானத்தை’ முன்மொழிந்தவர்;களும் அதற்கு முண்டு கொடுத்தவர்களும் ஏற்பட்ட கதி எஞ்சியிருக்கும் எம் மக்களுக்கு நேர வேண்டாம். கத்தியை தீட்டாமல் உங்கள் புத்தியை தீட்டுங்கள் தமிழ் மக்களை வாழவிடுங்கள்.
(கனடா பெனடிற்)
0 விமர்சனங்கள்:
Post a Comment