பர்மிய குடியேற்றவாசிகளை வைத்து வியாபாரத்தில் ஈடுபடும் மலேசிய, தாய்லாந்து அதிகாரிகள்
பரதன் குப்புசாமி பர்மிய குடியேற்றவாசிகளை வைத்து மலேசிய, தாய்லாந்து அதிகாரிகளும் சர்வதேச புள்ளிகளும் மேற்கொண்டுவரும் மோசடி வர்த்தகம் தற்போது அம்பலத்துக்கு வந்துள்ளது.
ஆயிரக்கணக்கான பர்மிய புலம்பெயர் தொழிலாளர்களைப் போன்றே தற்சின் மின்ற்றும் றங்கூனிலிருந்து பாங்கொக்கிற்கு சென்று தாய்லாந்து எல்லையை அடைந்தார். உள்ளூர் பங்காளிகள் பெருந்தொகை இலஞ்சத்தை பெற்றுக்கொண்டு இவர் அங்கிருந்து வட மலேசியா மூலம் தலைநகருக்குச் செல்ல உதவினார்கள். தலைநகரில் பயிற்சி எதுவும் பெறாதவர்களுக்கு குறைந்த கூலியில் தொழில் வாய்ப்புக்கள் அதிகம் உண்டு.
புலம்பெயர் தொழிலாளர்கள் தெரிவிக்கும் மலேசிய எதிர்ப்பு கருத்துக்களுக்காக உள்ளூர் மற்றும் கடல்கடந்த பிரசுரங்களை உன்னிப்பாக ஆராய்ந்துவரும் மலேசிய அதிகாரிகள் தம்மைப் பிடித்துக் கொள்வார்கள் என்பதற்காக தம்மை புகைப்படம் எடுக்க வேண்டாமென சின் மின்ற் மற்றவர்களிடம் கேட்டுக் கொண்டார். மலேசிய தலைநகர் வந்து சேர்ந்ததை சின் மின்ற் அவரது கிராமத்திலிருந்து வந்த ஏனையோருடன் கொண்டாடிக் களித்ததோடு வசதிகள் எதுவுமற்ற நிலையில் ஏற்கெனவே இங்கு வாழ்ந்து கொண்டும் தொழிற்செய்து கொண்டும் இருக்கும் சுமார் மூன்று மில்லியன் ஆசிய புலம்பெயர் தொழிலாளர்களுடன் இவரும் இணைந்து கொண்டார்.
இந்தத் தொழிலாளர்களில் சுமார் 150,000 பேர் பர்மிய புலம்பெயர் தொழிலாளர்களாவர். இவர்களிற் பலர் பர்மாவின் வட பிரதேசமான றக்கினைச் சேர்ந்த கச்சின் மற்றும் முஸ்லிம் றொஹின்கியாஸ் இனத்தை சேர்ந்தவர்களாவர்."பர்மிய குடியேற்றவாசிகளான நாம் மீன்களையும் காய்கறிகளையும் போன்று விற்பனை செய்யப்பட்டோம்' என்று பர்மிய புலம்பெயர் தொழிலாளர்கள் அதிகம் வாழும் தலைநகரிலுள்ள பெரிய சந்தை ஒன்றில் வைத்து ஐ.பி.எஸ்.ஸிற்கு பேட்டியளித்த மின்ற் தெரிவித்தார்.
மின்ற் கைது செய்யப்பட்டு தாய்லாந்து எல்லைப் பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டு உத்தியோகபூர்வமாக நாடுகடத்தப்பட்டார். இதன் அர்த்தம், அவர் மனிதர்களை வைத்து வியாபாரம் செய்வோருக்கு விற்கப்பட்டார் என்பதாகும். மலேசியா, தாய்லாந்து அதிகாரிகள் இரு தரப்பினராலும் எனது பணம் முழுவதும் கொள்ளையடிக்கப்பட்ட பின்னர் அவர்கள் என்னை சுரண்டல் பேர்வழிகளிடம் விற்றுவிட்டனர் என்று மின்ற் ஐ.பி.எஸ்.ஸிடம் தெரிவித்தார். "என்னுடைய உறவினர்கள் என்னை சுரண்டல் பேர்வழிகளிடமிருந்து பணம் கொடுத்து விடுவிக்கும் வரை மூன்று வாரங்களாக என்னை அவர்கள் காட்டு முகாம் ஒன்றில் தடுத்து வைத்திருந்தனர். மீண்டும் இலஞ்சம் வழங்கி நான் மலேசியாவிற்குச் சென்றேன் என்று அவர் கூறினார். மலேசியாவில் நிலைமை மோசமாக இருந்தாலும் பர்மா, அல்லது தாய்லாந்திலும் பார்க்க இங்கு பரவாயில்லை என்றும் அவர் தெரிவித்தார். இங்கு உணவு, வேலை ஆகியன கிடைப்பதுடன் தங்குவதற்கு இடமும் உண்டு என்று அவர் மேலும் கூறினார்".
ஒருமுறை மாத்திரம் கைது செய்யப்பட்டு நாடுகடத்தப்பட்ட மின்ற் அதிர்ஷ்டசாலி ஆவார். புடு பிரதேசத்தில் இவர் தற்போது ஒரு தலைவராக கணிக்கப்படுகிறார். ஏனைய தொழிலாளர்கள் மீண்டும் கைது செய்யப்படுவதையும் நாடு கடத்தப்படுவதையும் தவிர்ப்பதற்கு மின்ரின் உதவியை நாடுகிறார்கள்.
இந்த படுமோசமான மனித வியாபாரத்தை பர்மிய புலம்பெயர் தொழிலாளர்கள் அவர்களது மொழியில் புவான் (தூக்கி வீசுதல்) என்று கூறுகிறார்கள். அகதிகளையும் வெளிநாட்டுப் பிரஜைகளையும் பாதுகாப்பதற்கான முக்கிய சர்வதேச உடன்படிக்கைகளில் மலேசியா கைச்சாத்திடவில்லை. மலேசிய பிரஜைகளுக்கு வழங்கப்பட்டுள்ள உரிமைகள், சட்ட பாதுகாப்புகள் ஆகியவற்றை மலேசியா வெளிநாட்டுப் பிரஜைகளுக்கு வழங்கவும் இல்லை என்று புலம்பெயர் தொழிலாளர்களை பாதுகாத்துவரும் தன்னார்வ நிறுவனமான தெனாகனிட்டாவின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ஐரீன் பெர்னான்டெஸ் கூறுகிறார்.
மலேசியாவில் மக்கள் ஆதரவற்றிருக்கும் தொண்டர் படையான றிலா உட்பட குடிவரவு, பொலிஸ் மற்றும் சட்டத்தை அமுலாக்கும் அதிகாரிகள் அனைவருமே பர்மிய புலம்பெயர் தொழிலாளர்களை குறிப்பாக றொஹின்கியாஸ் இனத்தவர்களை தாய்லாந்திலுள்ள சுரண்டல் பேர்வழிகளுக்கு விற்பனை செய்து பணம் சம்பாதிக்கிறார்கள். சுரண்டல் பேர்வளிகள் பின்னர் இவர்களை தென்சீன கடலில் ஆழ்கடல் மீன்பிடியில் ஈடுபடுவோரிடம் விற்பனை செய்துவிடுகிறார்கள். பெண்கள் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்படுவதற்காக விற்பனை செய்யப்படுகிறார்கள்.
ஒரு விற்பனைச் சரக்காக பயன்படுத்தப்படும் இவர்கள் அடிக்கடி ஆள்மாறி ஆள் விற்பனை செய்யப்படுகிறார்கள். நீண்ட காலமாக இந்த சுரண்டல் வியாபாரத்தை தாங்கள் கண்டித்து வருவதாகவும் பெர்னான்டெஸ் கூறினார். இந்த வியாபாரத்தில் சம்பந்தப்பட்ட சீருடையணிந்த அதிகாரிகள் ஈடுபாடு குறித்து அதிகரித்த ஆதாரங்கள் முன்வைக்கப்பட்ட போதிலும் தங்கள் கோரிக்கைகள் செவிடன் காதில் ஊதிய சங்கு போல் ஆனதாக அவர் ஐ.பி.எஸ்.ஸிடம் தெரிவித்தார்.
றோஹின்கியாஸ் இனத்தவர்களை அவ்வப்போது கைதுசெய்து நாடுகடத்தலுக்கு அதிகாரிகள் விழிப்புப் படையான றிலாவை பயன்படுத்துவது சர்வசாதாரணமாகிவிட்ட போதிலும் பர்மா அவர்களை அந்நாட்டு பிரஜைகளாக அங்கீகரிக்காததால் அவர்கள் தாய்லாந்து எல்லைக்கு சமீபமாக கொண்டு செல்லப்பட்டு பலவந்தமாக தாய்லாந்திற்குள் அனுப்பப்படுகிறார்கள்.
அவர்கள் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு நாடுகடத்தப்படுகிறார்கள். ஆனால், அவர்கள் நாடற்றவர்களாததால் தாய்லாந்து எல்லைக்கு கொண்டு செல்லப்பட்டு அந்நாட்டு சுரண்டல் பேர்வழிகளுக்கு விற்கப்படுகிறார்கள் என்று தெரிவித்தார். நாடுகடத்தப்படும் றெநாஹ்கியாஸ் இனத்தவர்கள் தாய்லாந்து, மலேசிய அதிகாரிகளுக்கு இலஞ்சம் கொடுப்பதன் மூலம் மீண்டும் மலேசியாவிற்குள் நுழைகிறார்கள்.
மலேசிய ஊழல் அதிகாரிகள் மீதான குற்றச்சாட்டு நீண்ட காலத்தையது. அகதிகள், மனித உரிமை காப்போர், எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமன்றி ஒரு உத்தியோகபூர்வ விசாரணைக் குழுவும் இத்தகைய குற்றச்சாட்டுகளை தெரிவித்துள்ளது.
பழிவாங்கப்படலாம் என்ற அச்சம் காரணமாக அதிகாரிகள் மீது குற்றஞ்சாட்டாத போதிலும் மலேசியா, தாய்லாந்து எல்லையில் றொஹின்கியா அகதிகள் விற்பனை செய்யப்படுவது குறித்து மலேசியா தொலைக்காட்சி சேவைகள் விசாரணை செய்து ஒளிபரப்பியுள்ளன.
சக்திவாய்ந்த அமெரிக்க செனெற் வெளியுறவுக் குழுவினால் இந்த வியாபாரம் குறித்து நடத்தப்பட்டு வரும் விசாரணையில் கண்டுபிடிப்புக்கள் முக்கிய அமெரிக்க சட்ட அமுலாக்கல் அமைப்புகளுக்கும் இன்ரபோலுக்கும் அறிவிக்கப்பட்டதையடுத்து றொஹின்யா இனத்தவர்களின் அவலம் பற்றி இவ்வமைப்புகளின் கவனம் திரும்பியுள்ளது என்று செனெற் அதிகாரிகள் தெரிவித்தனர்.
மலேசிய அரசாங்க அதிகாரிகளிடம் சிக்கி பணத்தை இழந்த புலம்பெயர் தொழிலாளர்களின் அறிக்கைகளை அமெரிக்க செனெற் வெளியுறவுக் குழு ஆராய்ந்து வருகிறது என்று அதிகாரி ஒருவர் ஜனவரி மாத முற்பகுதியில் சர்வதேச செய்தி ஸ்தாபனங்களிடம் தெரிவித்தார்.
பர்மாவையும் ஏனைய நாடுகளையும் சேர் ந்து புலம்பெயர் தொழிலாளர்களில் சிலர் அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் ஆணையத்தினால் அங்கீகரிக்கப்பட்ட அகதிகளாவர். இந்த ஆணையம் கோலாலம்பூரில் ஒரு அலுவலகத்தை வைத்திருக்கிறது. 1995 ஆம் ஆண்டிலிருந்து சுமார் 40,000 றொஹின்கியாஸ் இனத்தவர்கள் அமெரிக்காவில் குடியேறியுள்ளார்கள். இவர்களில் அநேகமானோர் மூன்றாவது நாடுகளில் குடியேற்ற விண்ணப்பம் நிராகரிக்கப்பட்ட பின்னர் மலேசியாவிற்கு ஊடாக அமெரிக்கா சென்றவர்களாவர்.
இவர்கள் மியன்மாருக்கு (பர்மாவின் உத்தியோகபூர்வ பெயர்)திரும்ப முடியாத நிலையில் நிர்க்கதியானார்கள். அங்குள்ள இராணுவ ஆட்சி இவர்களை பழிவாங்குவதுடன் மூன்றாவது நாட்டுக்கு செல்வதற்கான விண்ணப்பத்தையும் நிராகரித்தது என்று இவர்களது நிலையை பாராளுமன்றத்தில் எடுத்துக் கூறிய எதிர்க்கட்சி உறுப்பினர் சார்ள்ஸ் சந்தியாகோ தெரிவித்தார். இவர்களுக்கு அவசர உதவி தேவை என்றும் அவர் ஐ.பி.எஸ்.ஸிடம் சுட்டிக்காட்டினார். ஐக்கிய நாடுகள் அகதிகளுக்கான உடன்படிக்கையில் மலேசியா கைச்சாத்திட வேண்டுமென வலியுறுத்திய சந்தியாகோ அகதிகளுக்கு உரிய அந்தஸ்தை வழங்க வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டார்.
மியன்மார் இராணுவ ஆட்சியினால் பிரஜாவுரிமை மறுக்கப்பட்டு நாடற்றவர்களாக ஆக்கப்பட்டோம். துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கப்பட்டதுடன் தாய்லாந்து, மலேசியா, பங்களாதேஷ் போன்ற அயல்நாடுகளுக்கு செல்ல நிர்ப்பந்திக்கப்பட்டோம் என்றும் அவர் தெரிவித்தார்.
அமெரிக்க செனெற் இந்த விவகாரத்தில் தலையிட்டதால் குழப்பமடைந்த மலேசியா அமெரிக்காவை விலகியிருக்குமாறு எச்சரித்தது. அமெரிக்காவின் செயல் மலேசிய இறைமையை மீறும் செயலாகும் என்று குற்றஞ்சாட்டியது. எனினும், பிரதமர் அப்துல்லா பாதாவி குற்றச்சாட்டுக்கள் தொடர்பான தகவல்களைத் தருமாறு அமெரிக்காவிடம் கோரினார். அதிகாரிகள் புலம்பெயர் தொழிலாளர்களிடமிருந்து பணம் கறப்பதை அரசாங்கத்தினால் பொறுத்துக்கொள்ள முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.
இது குறித்து குழப்பமடைந்த மலேசிய வெளியுறவு அமைச்சர் றாயிஸ் யட்டிம் இக்குற்றச்சாட்டுக்கள் ஆதாரமற்றவை என்றும் கேலிக்குரியன என்றும் தெரிவித்தார்.
எமது நாடு நாகரிகமான நாடு. அதிகாரம் படைத்தவர்கள் மக்களை விற்பனை செய்வதற்கு நாங்கள் மிருகத்தனமானவர்களல்ல. இத்தகைய குற்றச்சாட்டுகளை அமெரிக்க செனெற் எம்மீது சுமத்துவது நியாயமானதல்ல என்று அமைச்சர் யட்டிம் தெரிவித்தார்.
ஐ.பி.எஸ்






0 விமர்சனங்கள்:
Post a Comment