உமாமகேசன் எப்படிக் கொல்லப்பட்டார் என்ற மர்மம் துலங்குகிறது
1989 யூலை மாதம் 16ம் திகதி இரவு தெகிவளையில் உமாமகேஸ்வரன் தங்கியிருந்த வீட்டுக்குள் சிறிலங்கா இராணுவம் புகுந்தது. உமாமகேஸ்வரன் பின்பக்க மதிலால் ஏறிக் குதித்து தப்பி ஒடிவிட்டார். மற்றவர்களைப் போல் மனம் மாறாமல் உமாமகேஸ்வரன் மேல் நம்பிக்கையோடு இருந்த அவரது மெய்க்காப்பளர்களில் ஒருவரான சக்திவேலை மட்டும் இராணுவத்தினர் கைது செய்து சென்றுவிட்டனர். மதில் பாய்ந்து ஓடிய உமாமகேஸ்வரன் ஆச்சிராஜன் மற்றும் ராபின் துணையோடு பம்பலப்பிட்டி தொடர்மாடிக் கட்டிடத்திலிருந்த அவருக்கு வேண்டிய ஒருவர் வீட்டில் சென்று தங்கியிருந்தார்.
மறுநாள் 17ம் திகதி காலை தாங்கள் பாதுகாப்பு நிலைமைகளை அறிந்து வருவதாக சொல்லிவட்டு ஆச்சி ராஜனும், ராபினும் வெளியே சென்றனர்.
அன்று மதியம் ஆச்சி ராஜன் மட்டும் திரும்பி வந்து சாப்பிடப் போக வரும்படி உமாமகேஸ்வரனை அழைத்தான். அவர் அவனுடன் வெளியே வந்ததும் அந்தத் தொடர்மாடிக் கட்டிடத்தின் முன்பிருந்த காலிவீதியால் செல்வது ஆபத்தானது என்றும் பின்புறமாக கடற்கரையோரம் உள்ள வீதி வழியாக செல்லலாம் என்றும் சொல்லி அவரை அழைத்துச் சென்றான். அவர்கள் இருவரும் அந்த வீதியில் சிறிது தூரம் சென்ற போது ராபின் உட்பட 5 பேர் அங்கே ஓரிடத்தில் இருந்தார்கள். அதைக்கண்ட உமாமகேஸ்வரன் இந்த சனியன்கள் இதில ஏன் நிற்குதுகள் உதுகளுக்குச் சொன்னாலும் விளங்காது என்று பேசிக் கொண்டு அவர்களைக் கடந்து அப்பால் சென்றார்.
ஒரு பத்து மீட்டர் தூரம் அவர் சென்றிருக்கமாட்டார் அதற்குள் முதல்வெடி அவரது முதுகைத் துளைத்தது. ஐயோ என்று அவர் அலற அடுத்தடுத்த வெடிகள் அவரது உடலைத் துளைத்தன. அவர் நிலத்தில் சுருண்டு வீழ்ந்தார். அந்த இடத்திலேயே அவர் கதை முடிந்தது.உமாமகேஸ்வரன் கொலை முடிந்த கையோடு சென்னை வடபழனி தேசிகர் தெருவில் உள்ள 11ம் இலக்க இல்லத்தில் ஒரு கூட்டம் நடந்ததாகவும் அதில் இன்றைய புளொட் தலைமை உட்பட இன்றைய புளொட் முக்கியஸ்தர்கள் சிலரும் கலந்து கொண்டனர்.
இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவரும் உமாமகேஸ்வரனின் கொலையை நியாயப்படுத்தி அதற்கான காரணங்களை ஒரு ஒலிப்பதிவு நாடாவில் பதிவு செய்து இலங்கையில் எஞ்சியிருந்த புளொட் உறுப்பினர்களுக்குப் போட்டுக் கேட்க ஏற்பாடு செய்து அனுப்பியும் இருந்தார்கள். இந்த ஒலிப்பதிவு நாடா மற்றவர்களின் கையில் அகப்படாத வகையில் வவுனியாவில் வைத்து அதை மாணிக்கதாசன் தீயிட்டுக் கொளுத்தினான்.
உமாமகேஸ்வரன் கொலையுண்டவுடன் அவரது சடலத்தைப் பொறுப்பேற்க உடனடியாக யாரும் முன்வரவில்லை. உமாமகேஸ்வரன் கொல்லப்பட்டுவிட்டார், அதுவும் ஆச்சிராசன், ராபின் ஆகியோர் தான் அவரை அழைத்துச் சென்று கொலைசெய்தவர்கள் என்ற விடயத்தை மற்றவர்களுக்கு முதலில் சொன்னவர் சாம் முருகேசு என்பவர். இவர் தான் அத்துலத்முதலியின் உதவியுடன் பின்னர் உமாமகேஸ்வரனது சடலத்தைப் பொறுப்பேற்று வவுனியாவிற்கு கொண்டு சென்று அடக்கமும் செய்தார்.ஆனால் உமாமகேஸ்வரன் இறந்தவுடன் புளொட்டின் பொலிப் பீரோவோ, மத்திய குழுவோ கூட்டப்படவில்லை. மாறாக மாநாட்டில் இயக்கத்தின் சகல பொறுப்புக்களிலுமிருந்து இடை நிறுத்தி வைக்கபட்ட மாணிக்கதாசன் வவுனியாவில் வைத்து தனக்கு வேண்டிய சிலரின் உதவியோடு தானே அமைப்பின் தற்காலிக தலைவராக தன்னை தானே பிரகடனப்படுத்திக் கொண்டார்.
ஆச்சிராசன், ராபின் அகியோரே உமாமகேஸ்வரனை கொலை செய்ததாக சொன்ன சாம் முருகேசுவே உமாமகேஸ்வரனை கொலை செய்த ஆயதத்தை வைத்திருந்ததாகவும் பின்பு அவற்றை புளொட்டின் புதிய நிர்வாகம் அவரிடமிருந்து பெற்று மறைத்துவிட்டதாகவும்; சிலர் சொல்கிறார்கள். இதில் எந்தளவு துரம் உண்மை இருக்கிறது என்று தெரியவில்லை. ஏனெனில் அதன் பின் சாம் முருகேசு நீண்ட காலம் உயிரோடு இருக்கவில்லை. திடீரென்று மர்மமான முறையில் அவர் கொல்லப்பட்டுவிட்டார். இதேபோல் உமாமகேஸ்வரன் கொலை செய்யப்பட்ட தினத்திற்கு முன் தினம் சிறிலங்கா இராணுவத்தால் கைது செய்யப்பட்டு பின் விடுதலை செய்யப்பட்ட உமாமகேஸ்வரனது நம்பிக்கைக்குரிய மெய்ப்பாதுகாப்பாளரான சக்திவேல், உமாமகேஸ்வரனை கொன்றவர்களை பழிவாங்கியே தீருவேன் என்று சொல்லிக் கொண்டு திரிந்தார். திடீரென்று அவரும் ஒரு நாள் கொலையுண்டு போனார். 1993ம் ஆண்டு சிறிலங்கா அரசின் தேவைக்காக ஐரோப்பிய சுற்றுப் பயணம் ஒன்றை மேற்கொண்டு வந்த மாணிக்கதாசன் முன்னாள் புளொட் உறுப்பினர்கள் பலருக்குத் தொலைபேசி எடுத்து உமாமகேஸ்வரனைக் கொலை செய்த ஆச்சிராசனை தாங்கள் கொன்றுவிட்டதாக அதாவது அவருக்கு தண்டனை கொடுத்துவிட்டதாக சொல்லியிருந்தார்.
இதைவிட சுவீசில் வசித்து வந்த ராபினும், அவரது மனைவியும், மனைவி வயிற்றிலிருந்த குழந்தையும் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டனர். சுவீஸ் பொலிசார் அங்கேயிருந்த புளொட் உறுப்பினர்கள்தான் இந்தக் கொலைகளின் சூத்திரதாரிகள் என்பதை கண்டுபிடித்து அவர்களை கைது செய்திருக்கிறார்கள். - ஜெயசீலன்
0 விமர்சனங்கள்:
Post a Comment